ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க இடமளி​யோம்

ஐ.ம.சு.மு அறிவிப்பு

ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என ஐ.ம.சு.மு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் முதலில் ஜனாதிபதியுடன் பேசிய பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்க உள்ளதாக ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்தார். ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு ஏனைய அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீட்டை விட கூடுதல் வாக்குகளில் நிறைவேற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்கப்போவதாக ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,

போதைப்பொருளுக்கு எதிராக ஜனாதிபதி முன்னெடுக்கும் திட்டங்களை தோற்கடிக்க தேவையான எம்.பிக்கள் தான் அவருக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க விரும்புவார்கள்.ஆனால் நாம் அதற்கு இடமளிக்கப் ​போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதே வேளை ஜனாதிபதியின் கீழே பாதுகாப்பு அமைச்சு உள்ளது. இதற்காக நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டால் பொலிஸார் உட்பட பாதுகாப்பு தரப்பிற்கு சம்பளம் வழங்க முடியாது. அந்த துறைகள் பாதிக்கப்படும் என ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்க இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் கூறினார்.

இதே வேளை ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிப்பது தொடர்பில் தான் தெரிவித்த கருத்தை வாபஸ் பெறப்போவதில்லை என முஜிபுர் ரஹ்மான் எம்.பி நேற்று தெரிவித்தார். அவர் பிரதமர் அடங்கலான அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவதால் அவருக்கான நிதி ஒதுக்கீட்டை தோற்கடிக்கப் போவதாக அவர் கூறினார். இதே வேளை பின்வரிசை எம்.பிக்கள் இணைந்து இதனை தோற்கடிக்க தயாராக இருப்பதாக ஐ.தே.க பின்வரிசை எம்.பிக்கள் சிலரும் கூறியுள்ளனர்.(பா)

Tue, 03/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை