ஆன்மீகம் ஊடாக அமைதி சமாதானம் நிலைபெறட்டும்

பிரதமரின் மகா சிவராத்திரி செய்தி

ஆன்மீகத்தின் ஊடாக நாட்டில் சாந்தி,சமாதானம் நிலைபெறவேண்டுமென மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

பிரதமர் தனது செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 

ஞான ஒளி ஊடாக ஆன்மீக விடுதலை கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் உலகம் முழுவதும் இந்து சமய மக்கள் ஒன்றிணைந்து மிகுந்த பக்தியுடன் மகா சிவாராத்திரி தினத்தைக் அனுஷ்டிக்கின்றனர். சிவபெருமானை வழிபடுவது இந்து மக்களின் சமய வழிபாடுகளில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. சிவபெருமானின் பிரதிபலிப்பாக இயற்கை கருதப்படுவதுடன் அனைத்து உயிர்களும் சிவனாலேயே படைக்கப்பட்டதாக இந்துக்கள் நம்புகின்றனர்.  

உலகிற்கு உயிர்ப்பை வழங்குகின்ற மனித வாழ்வை வளப்படுத்துகின்ற சிவபெருமானுக்கு மிகவும் உகந்த இந்த இரவில் அனைவரும் ஒன்றாக விரதமிருந்து இரவு முழுவதும் கண் விழித்துப் புண்ணிய கருமங்களில் ஈடுபட்டுச் சமயச் சடங்குகளைநிறைவேற்றுவதன் மூலம் ஆன்மீக விடுதலை கிடைக்குமென கருதப்படுகிறது. 

உலகின் பிறப்பு மற்றும் பாதுகாப்பினைப் பிரதிபலிக்கும் சிவதாண்டவம் இடம்பெற்ற இரவாகவும் மகா சிவராத்திரி கருதப்படுவதுடன் அதனைக் கொண்டாடும் வகையில் ஆடல்,பாடல், இசை உள்ளிட்ட பல்வேறு பட்ட கலாசார அம்சங்களின் மூலம் மகா சிவராத்திரி பல் வண்ண அழகினைப் பெறுகிறது. 

இன,மத,கலாசாரப் பல்வகைமையின் அழகு மற்றும் பெறுமதியை அறிந்து கொள்வதற்கு மகா சிவராத்திரி தினம் நம் அனைவருக்கும் பிரகாசத்தின் தினமாக அமையும். 

மகா சிவராத்திரி தினத்தை மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் சகோதர இந்து மக்களுக்காகப் பிரார்த்திப்பதுடன் ஆன்மிக விடுதலை மூலம் சாந்தி,சமாதானம் நிலைபெறவேண்டும் என வாழ்த்துகிறேன்.   

Mon, 03/04/2019 - 08:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை