நாலக்க டி சில்வாவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

RSM
நாலக்க டி சில்வாவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு-Nalaka de Silva's Bail Rejected by Colombo High Court

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோர் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய விடயம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வாவின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த மனு இன்றைய தினம் (08) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் மஞ்சுள திலகரத்ன குறித்த கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.

அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் வழங்கிய உத்தரவை செல்லுபடியற்றதாக்கி, பிணை வழங்குமாறு, நாலக்க டி சில்வா கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தார்.

குறித்த கோரிக்கையை நிராகரித்த நீதவான், கொழும்பு கோட்டை நீதவான் வழங்கிய உத்தரவு, சட்டபூர்வமானது என அறிவித்ததோடு, அதற்கமைய குறித்த விண்ணப்பத்தை விசாரணைக்கு உட்படுத்தாது நிராகரிப்பதாக உத்தரவிட்டார்.

இது தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் (06) கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவருக்கு எதிர்வரும் மார்ச் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டது.

இதன்போது, குறித்த கொலை சதி தொடர்பில், அவருக்கு எதிராக போதிய சாட்சியங்கள் காணப்படுவதாக, சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் நீதிமன்றில் விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Fri, 03/08/2019 - 14:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை