'கொஸ்கொட சுஜீக்கு' சர்வதேச பிடியாணை

இன்டர்போல் ஊடாக  கைது செய்ய உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் கைப்பற்றப்பட்ட சுமார் 294 கிலோ ஹெரோயின் போதைப் பொருளை இலங்கைக்கு அனுப்பியதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர்களான 'கொஸ்கொட சுஜீ' மற்றும் ‘மொரில்’ உட்பட ஐந்து பேரை கைது செய்வதற்கு நேற்று (01) சர்வதேச பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கோட்டை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் நேற்று இந்த பிடியாணையை பிறப்பித்தது. கொழும்பு கோட்டை பதில் உத்தியோகபற்றற்ற மாஜிஸ்ட்ரேட் தீமணி பெத்தவெல இந்த பிடியாணையை பிறப்பித்ததுடன் சர்வதேச பொலிஸாருக்கு அனுப்புவதற்கு ஏதுவாக பிடியாணையை ஆங்கில மொழியில் வெளியிடுமாறும் உத்தரவிட்டார். இப்பிடியாணையின் பிரதிகளை குடிவரவு- குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் விமான நிலையத்தின் உரிய அதிகாரிகளுக்கும் கிடைக்கும்படி செய்யுமாறும் பதில் நீதவான் உத்தரவிட்டார். 'கொஸ்கொட சுஜீ' என்றழைக்கப்படும் சுஜீவ என்ற நபருக்கும் என்டனி மைக்கல் மொறில், மொஹமட் சிராஸ் பாயிஸ், வஸீம் அப்துல் ரஹீம் ஆகியோருடன் சுஹோன் செரிக் அஹமட் ஹூசைன் என்ற பங்களாதேஷ் பிரஜைகளுக்குமே இவ்வாறு சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஏற்கனவே கைதாகியுள்ள சந்தேக நபர்களான மொஹமட் வஸீர் மொஹமட் அமீர் மற்றும் மொஹமட் அஹமட் ருஷ்தி ஆகிய இருவரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அடுத்த வழக்கு தவணையின்போது நீதிமன்றத்தில் அறிக்கையிடுமாறும் நீதவான் உத்தரவிட்டார். ஹெரோயினை வைத்திருந்தமைக்காக கைது செய்யப்பட்ட மொஹமட் அமீர் மற்றும் அஹமட் ருஷ்தி ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது 294.490 கிலோ ஹெரோயினை கொஸ்கொட சுஜீ உள்ளிட்ட ஐந்துபேரே கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளதென்றும் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

 

 

Sat, 03/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை