டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ‘நோபோல்’ பந்து வீசினால் ‘பிரீஹிட்’

எம்.சி.சி குழு பரிந்துரை

டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நோபோல் வீசினால் பிரீஹிட் கொண்டு வர எம்.சி.சி. குழு பரிந்துரைத்துள்ளது.

கிரிக்கெட் ஆட்டங்களில் விதிமுறைகளை மாற்றுவதிலும், புதிய நுணுக்கங்களை புகுத்துவதிலும் லண்டனை மையமாக கொண்டு செயல்படும் எம்.சி.சி. உலக கிரிக்கெட் குழு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த குழுவில் இந்நாள், முன்னாள் வீரர்கள், நடுவர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு பரிந்துரைக்கும் விதிமுறைகளை தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பெரும்பாலும் அங்கீகரிக்கிறது.

மைக் கேட்டிங் தலைமையிலான எம்.சி.சி. உலக கிரிக்கெட் குழுவின் ஆலோசனை கூட்டம் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடந்தன. இதன் முடிவில் சில பரிந்துரைகளை இந்த குழு முன் வைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

அண்மை காலமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தாமதமாக பந்து வீசும் புகார் அதிகமாக எழுகிறது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மெதுவாக பந்து வீசிய குற்றச் சாட்டுக்காக தலைவர் என்ற முறையில் மேற்கிந்தியதீவு தலைவர் ஜாசன் ஹோல்டருக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இரண்டரை நாட்களில் நிறைவடைந்த டெஸ்ட் போட்டியில் தாமதமாக பந்து வீச்சு குற்றச்சாட்டு கூறுவதா? என்று முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதை கவனத்தில் கொண்டு நேரத்தை கணக்கிட ஸ்கோர் போர்டில் எலக்ட்ரானிக் கடிகாரம் (டைமர் கிளாக்) பொருத்தப்படும். ஓவர் முடிந்ததும் 45 வினாடியில் இருந்து கவுண்ட்டவுன் ஆரம்பிக்கும். இந்த நேரம், பந்தை எதிர்கொள்ளும் புதிய துடுப்பாட்ட வீரருக்கு 60 வினாடிகளாகவும், மாற்று பந்து வீச்சாளராக வருபவருக்கு 80 வினாடிகளாகவும் அதிகரிக்கப்படும். கவுண்ட்டவுன் ஜீரோவை எட்டும் போது துடுப்பாட்டம் அல்லது பந்து வீச்சுக்கு இரண்டு அணி தரப்பினரும் தயாராக இருக்க வேண்டும். கவுண்டவுன் முடிந்ததும் ஆட்டத்தை தொடங்காவிட்டால் எச்சரிக்கை விடுக்கப்படும்.

இதே விதிமீறல் தொடர்ந்து நீடித்தால், சம்பந்தப்பட்ட அணியை தண்டிக்கும் வகையில் எதிரணிக்கு 5 ஓட்டங்கள் வழங்கப்படும். விக்கெட் வீழ்ச்சியின் போதும் இதே நேரம் முறை பின்பற்றப்படும். ஆனால் ஆடுகளத்தில் (பிட்ச்) இருந்து வீரர்களின் ஓய்வறை இருக்கும் தூரத்தை வைத்து இந்த கால அளவில் மாற்றம் இருக்கும்.

ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி போன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நோபோல் வீசினால் பிரீஹிட் வழங்கப்பட வேண்டும். இதனால் சுவாரஸ்யம் அதிகமாகும். அத்துடன் குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் பிரீஹிட் முறை கொண்டு வரப்பட்டதும் நோபோல் வீசுவது வெகுவாக குறைந்திருக்கிறது. இங்கிலாந்து அணியின் சமீபத்திய செயல்பாட்டை பார்க்கும் போது, 45 ஒரு நாள் போட்டிகளில் அந்த அணி ஒரு நோபோல் கூட வீசவில்லை. ஆனால் மேற்கிந்திய தீவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 11 நோபோல்களை வீசியிருக்கிறது. எனவே ‘பிரீஹிட்’ வழங்கப்படும் போது, டெஸ்ட் போட்டிலும் நோபோல் வீசப்படுவது குறையும்.

தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் எஸ்.ஜி, கூக்கபுரா, டியூக்ஸ் ஆகிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அடுத்ததாக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடங்க இருப்பதால் எல்லா டெஸ்ட் போட்டிகளுக்கும் (பகல்-இரவு டெஸ்டை தவிர்த்து) ஒரே மாதிரியாக தரமான பந்துகளை பயன்படுத்த வேண்டும். டியூக்ஸ் வகை பந்தை இதற்கு முயற்சித்து பார்க்கலாம்.

மேற்கண்டவாறு கிரிக்கெட் குழு பரிந்துரை செய்திருக்கிறது. இதை செயல்படுத்துவது குறித்து ஐ.சி.சி. விரைவில் முடிவு எடுக்கும். ஐ.சி.சி. சம்மதம் அளித்ததும் புதிய விதிமுறைகள் அமுலுக்கு வரும்.

Fri, 03/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை