விண்வெளிப் பந்தயத்தில் வேகமாக முன்னேறும் சீனா

இந்திய விண்வெளி ஆய்வு நிலையமான இஸ்ரோவின் வரலாற்று சிறப்பு மிக்க 'சந்திரக் கனவை' (நிலாவில் தரை இறங்கும் கனவு) சத்தம் போடாமல் சாதித்து காட்டிய சீனா, தற்போது அடுத்தகட்டமாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவிற்கும் சவாலாக சாதனை செய்யப் போகிறது.விண்வெளி சாதனையில் அமெரிக்காவை முந்தி விட வேண்டும் என்று போட்டி போடும் ரஷ்யாவிற்கும் சீனா இப்போது சவாலாகிப் போயுள்ளது.

சீனாவின் உயர்மட்ட விஞ்ஞானி ஒருவர் வெளியிட்டுள்ள தகவலின்படி, அடுத்த ஆண்டு சீனா அதன் செவ்வாய்க் கிரக பயணத்தை நிகழ்ந்த உள்ளது. சீனா அதன் வெற்றிகரமான சந்திரக்கிரக பயணத்தை (தரை இறக்கம்) நடத்தி முடித்ததைத் தொடர்ந்து தொடர்ச்சியான விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

பெய்ஜிங்கில் நடந்த மிகப் பெரிய அரசியல் நிகழ்வான சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் முதல் நாளில் பேசிய சீனாவின் சந்திர ஆய்வுத் திட்டத்தின் முதன்மை வடிவமைப்பாளரான வு வேயர்ன், "சீனாவின் அடுத்த இலக்கு சிவப்புக் கிரகம் செவ்வாய்தான்" என்று கூறினார்.

"கடந்த 60 ஆண்டுகளில் நாம் நிறைய சாதனைகளை செய்துள்ளோம். ஆனால் உலக விண்வெளி சக்திகளுடன் ஒப்பிடும் போது நாம் தொலைவில் உள்ளோம், நாம் நமது வேகத்தை இன்னும் வேகப்படுத்த வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

"அடுத்த வருடம், நாம் ஒரு செவ்வாய்க் விண்கலத்தை விண்வெளிக்குள் செலுத்த உள்ளோம். அது செவ்வாய்க் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைந்து பின்னர் அதன் நிலப்பகுதியில் தரை இறங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும்" என்றும் வு வேயர்ன் கூறினார்.

சீனா நிலவிற்கு கூடுதல் விண்கலங்களை அனுப்பும் திட்டங்களையும் கொண்டுள்ளது, அது நிலவின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை எடுத்து பூமிக்குத் திரும்பும். இந்தத் திட்டம் வெற்றிகரமாக முடியும் பட்சத்தில் நிலவு மாதிரிகளை சேகரித்த மூன்றாவது நாடு என்கிற பெருமையை சீனா அடையும். முதல் இரண்டு இடங்களில் அமெரிக்காவும் ரஷ்யாவும் உள்ளன.

சீனாவின் இந்த திடீர் விண்வெளிப் பந்தயம் சற்று தாமதமான ஒன்றாகும். சீனா 1970 ஆம் ஆண்டு வரை அதன் முதல் செயற்கைக்கோளை சுற்றுப்பாதைக்குள் அனுப்பவில்லை. அந்த நேரத்தில் அமெரிக்கா ஏற்கனவே நிலவில் ஒரு விண்வெளி வீரரை தரையிறக்கி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனா விண்வெளி பந்தயத்தில் சற்று வேகமாகவே முன்னேறுகிறது. குறிப்பாக கடந்த 2003 ஆம் ஆண்டில் ஆறு குழுக்களை விண்வெளிக்கு அனுப்பியது. அத்துடன் இரண்டு விண்வெளி ஆய்வகங்களை பூமியின் சுற்றுப்பாதைக்குள் செலுத்தியதில் தொடங்கி தீயாக வேலை செய்து வருகிறது.

கடந்த 2013 ஆம் ஆண்டில் சீனா ரோவர் - யூடு 1 ஐ வெற்றிகரமாக நிலவில் தரை இறக்கியது. கடந்த டிசம்பர் மாதத்தில் மற்றொரு ஆய்வுக் கலம் மற்றும் ஒரு ரோவர் ஆன யூடு 2 ஐ நிலவின் இருண்ட பகுதில் (நிலவின் முதுகில்) தரை இறக்கியது. இந்த குறிப்பிட்ட பகுதியில் தரை இறங்கிய முதல் நாடு சீனா என்பது குறிப்பிடத்தக்கது.

Wed, 03/13/2019 - 01:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை