‘அருணி பபா’ எனும் பெண் ஒருவரும், ‘தெல் சூட்டி’ என்பவரும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு மட்டக்குளி, சமித்புர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ‘சூட்டி உக்குன்’ உள்ளிட்ட 5 பேரை கொலை செய்த சம்பவத்தின் சந்தேகநபரான, ‘குடு ரொஷான்’ என்பவர் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ளார்.
குறித்த நபரின் மனைவியான சமித்புரவைச் சேர்ந்த ‘அருணி பபா’ என அழைக்கப்படும், விஜேசிங்க ஆரச்சிகே நிரோஷனீ (30) எனும் சந்தேகநபரான குறித்த பெண் 3 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ரூபா 10 இலட்சத்திற்கும் அதிகமான பணத்துடன் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘குடு ரொஷான்’ சிறையில் இருந்து கொண்டு போதைப் பொருள் விற்பனையை மேற்கொண்டு வருவதாகவும், அதனை தனது மனைவியான ‘அருணி பபா’ மூலம் மேற்கொண்டு வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதேவேளை ராகம மற்றும் கடவத்தையில் வாடகைக்கு விடப்பட்டுள்ள அவர்களுக்கு சொந்தமான இரு வீடுகள் தொடர்பிலான தகவல்களும் கிடைக்கப்பெற்றதை அடுத்து, அதிரடிப் படையினர் மேற்கொண்ட சோதனையில், கடவத்தையில் உள்ள வீட்டில் வைத்து, ‘தெல் சூட்டி’ என அழைக்கப்படும் 46 வயதான, சாலிந்த தமர்மசிறி எனும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரிடமிருந்து, 2 கிராம் ஹெரோயின், 1 கிராம் ஐஸ் மற்றும் ரூபா 7 இலட்சத்திற்கும் அதிகமான பணம் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
from tkn