‘வடக்கின் போர்' என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும் யாழ். பரியோவான் கல்லூரிக்கும் (சென்.ஜோன்ஸ் கல்லூரி) இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 07 ஆம் திகதி, வியாழக்கிழமை ஆரம்பமாகி 03 நாள்கள் நடைபெறவுள்ளது.
113 ஆவது முறையாக இடம்பெறும் இப்போட்டி, இம்முறையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியின் பாதுகாப்பு இரண்டு கல்லூரி சமூகத்தாலும் பொலிஸாரிடம் வழங்கப்பட்டுள்ளது.
போதையில் அடாவடியில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது. இந்தப் போட்டி தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பும், வீரர்கள் அறிமுக நிகழ்வும் இன்று (04) யாழ். மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
மதுபோதை அல்லது போதைப் பொருள்கள் பாவனையுள்ள எவரும் போட்டியைப் பார்க்க அரங்குக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
இரு கல்லூரி மாணவர்களும் சீருடையுடன் மட்டுமே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவர் எனவும், பழைய மாணவர்களும் நலன்விரும்பிகளும் இருப்பிட வசதிகொண்ட பகுதிக்காக ரூபா 100 செலுத்தி அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுப்பிரமணியம் பூங்கா பக்கம் உள்ள நுழைவாயில் மூடப்பட்டிருக்கும் எனவும், புனித ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் பழைய மாணவர்களும் பொதுநூலகப் பக்கமாக மைதானத்துக்கு மேற்குத் திசையிலிருக்கும் வாயில் ஊடாக அனுமதிக்கப்படவுள்ளனர்.
ரிம்பர் மண்டப பக்கமாக உள்ள வாயில் ஊடாக மத்திய கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.
அணிகளின் வீரர்கள் மற்றும் மாணவ தலைவர்கள் தவிர்ந்தோர் எல்லைக்கோட்டுக்குள்ளே எக்காரணம் கொண்டும் உட்பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.
ஆரம்ப நாள் நிகழ்வு வியாழக்கிழமை (07) முற்பகல் 9.15 மணிக்கு வீரர்கள் அறிமுகம் இடம்பெற்று போட்டி மு.ப.10 மணிக்கு போட்டி ஆரம்பமாகும் என இரு கல்லூரி அதிபர்களும் தெரிவித்தனர்.
(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்)
from tkn