இலங்கை-தென்னாபிரிக்கா ஒருநாள் தொடர் இரண்டாவது போட்டி இன்று

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று 6ம் திகதி செஞ்சூரியனில் நடைபெறவுள்ளது.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியிருந்த மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர், ஓசத பெர்னாண்டோ நேர்த்தியான துடுப்பாட்ட யுத்திகளுடன் 49 பந்துகளில் 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். அதிலும், அறிமுக வீரரான இவரது துடுப்பாட்ட முறைகள் அனைவரையும் கவர்ந்திருந்தது.

ரபாடா மற்றும் லுங்கி என்கிடி ஆகிய தென்னாபிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களை ஓசத பெர்னாண்டோ எதிர்கொண்ட விதமும், அவர்களுடைய பந்துகளுக்கு விளாசிய இரண்டு சிக்ஸர்களும் இரசிகர்களையும், வீரர்களையும் அதிகமாக கவர்ந்திருந்தது. இலங்கை அணி தோல்வியுற்றுள்ள போதிலும், அவரது துடுப்பாட்டம் அனைவராலும் பாரட்டப்பட்டு வருகின்றது.

இலங்கை அணியின் தலைவர் லசித் மாலிங்கவும் ஓசத பெர்னாண்டோவின் துடுப்பாட்டத்தை பாரட்டியுள்ளார். போட்டிக்கு பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கருத்து தெரிவித்த இவர்,

“ஓசத பெர்னாண்டோ உள்ளூர் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்துள்ளார். அதேநேரம் இறுதியாக நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் அவரது பங்களிப்பு சிறப்பாக இருந்தது. அணித் தலைவர் என்ற ரீதியில், 4வது இடத்தில் நேர்த்தியாகவும், இன்னிங்ஸை வழுப்படுத்தக்கூடியதுமான துடுப்பாட்ட வீரர் ஒருவர் தேவை. குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் ஓய்வுக்கு பின்னர், ஓசத பெர்னாண்டோ போன்ற திறமை வாய்ந்த வீரர் ஒருவரால் அந்த இடத்தை நிரப்ப முடியும். எனினும், ஓசத பெர்னாண்டோ இப்போதுதான் துடுப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளார். அவர் எதிர்வரும் காலங்களிலும் சிறப்பாக துடுப்பெடுத்தாடும் பட்சத்தில் அவரால் மேலும் முன்னேற்றம் காண முடியும். ஒசத பெர்னாண்டோ இலங்கை கிரிக்கெட் அணியால் கண்டுபிடிக்கப்பட்ட மிகச் சிறந்த வீரர்”

இலங்கை சிறந்த இரண்டு இணைப்பாட்டங்களை பகிர்ந்திருந்தது. குசல் பெரேரா மற்றும் ஓசத பெர்னாண்டோ ஜோடி 76 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் மற்றும் தனன்ஜய டி சில்வா ஜோடி 94 ஓட்டங்களை பகிர்ந்திருந்தனர். எனினும், குறித்த இரண்டு இணைப்பாட்டங்களையும், இம்ரான் தாஹிர் தனது சுழலால் தகர்த்தார். இம்ரான் தாஹிரின் சுழலுக்கு துடுப்பெடுத்தாட, இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் முற்றுமுழுதாக தடுமாறினர்.

“இம்ரான் தாஹிரின் முதல் இரண்டு ஓவர்களுக்கு பின்னர், தென்னாபிரிக்க அணி அவரை இணைப்பாட்டத்தை தடுக்கும், விக்கெட்டினை வீழ்த்தும் வீரராக பயன்படுத்துவதை நாம் அறியக்கூடியதாக இருந்தது. குறித்த திட்டத்தை தடுப்பதற்கு நாம், தாஹிருக்கு விக்கெட்டினை விட்டுக்கொடுத்திருக்க கூடாது. ஆனால், அவர் ஒவ்வொரு முறை பந்து வீச வரும் போதும் விக்கெட்டினை கைப்பற்றினார். நாம், அடுத்தப் போட்டியில் தாஹிரை கையாண்டு, எவ்வாறு முன்னோக்கி செல்வது என்பதை சிந்திக்க வேண்டும்”

இலங்கை அணி 101 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த போதும், தனஞ்சய டி சில்வா மற்றும் குசல் மெண்டிஸ் சிறப்பான இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர். குறிப்பாக இலங்கை அணியின் ஒவ்வொரு துடுப்பாட்ட வீரரும் சிறப்பான ஆரம்பத்தை பெற்றிருந்தனர். ஆனால், அவர்களால் சிறந்த ஓட்ட எண்ணிக்கைக்கு செல்ல முடியவில்லை.

“நாம் சிறந்த ஆரம்பத்தை பெற்ற போதும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தோம். எம்மால், இன்னும் 50 அல்லது 60 ஓட்டங்களை பெற்றிருந்தால், எதிரணிக்கு அழுத்தத்தை கொடுத்திருக்க முடியும். ஒரு துடுப்பாட்ட வீரர் சிறப்பான ஆரம்பத்தை பெற்றால், சிறந்த ஓட்ட எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்”

“ஒருநாள் போட்டியில் துடுப்பாட்ட வீரர் ஒருவர் 30 அல்லது 40 ஓட்டங்களை பெறுவது அணிக்கு போதுமான ஓட்ட எண்ணிக்கை அல்ல. நான் அணியின் 9வது துடுப்பாட்ட வீரர். ஆனால், இந்தப் போட்டியில் 38வது ஓவரில் களத்துக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. ஒருநாள் போட்டிகளில் இதுபோன்ற விடயங்கள் இடம்பெற கூடாது.” என்றார்.

Wed, 03/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை