டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை உடன்பாடு இன்றி முடிவு

தடைகளை தளர்த்துவது குறித்த வட கொரியாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்ததை அடுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலை வர் கிம் ஜொங் உன் இடையிலான பேச்சுவார்த்தை உடன்பாடு இன்றி முடிவடைந்துள்ளது.

“பொருளாதார தடை பற்றிய விடயம் காரணமாக இருந்தது” என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார். “முழுமையாக தடையை நீக்குவதற்கு அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அதனை எம்மால் செய்ய முடியாது” என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடந்த உச்சிமாநாட்டில் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அணு ஆயுதத்தை முழுமையாக கைவிட வட கொரியா ஒப்புக்கொள்ளுமா என்பதே பேச்சுவார்த்தையின் முக்கிய விடயமாக இருந்தது.

உச்சிமாநாட்டில் இரு தலைவர்களும் கூட்டு உடன்படிக்கைகையில் கையெழுத்திடும் நிகழ்வுக்கும் அதைத் தொடர்ந்து மதிய விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் உடன்பாடு எட்டப்படாததையடுத்து இரு தரப்பும் இந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்தன.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அதிபர் டிரம்ப், “எதாவது உடன்பாடு எட்டப்பட்டு கையெழுத்திடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நாங்கள் கிம் ஜொங் உன் உடன் முழு தினத்தையும் செலவிட்டோம். அவர்கள் முழுமையாக பொருளாதார தடையை நீக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் அதை எங்களால் செய்ய முடியாது.

உச்சி மாநாட்டின் முடிவில் நாங்கள் நல்ல நண்பர்களாகியிருக்கிறோம் என நினைக்கிறேன். வட கொரியா நாங்கள் விரும்பிய சில விடயங்களை செய்ய ஒப்புக்கொண்டது. ஆனால் நாங்கள் கூறும் இடத்தில் நிறைவேற்றத் தயாராக இல்லை” என்றார்.

அதாவது வடகொரியா சில இடங்களை அணு ஆயுதமற்ற பகுதியாக்க ஒப்புக்கொள்கிறது. ஆனால் அமெரிக்கா விரும்பும் இடங்களில் அதை நடைமுறைப்படுத்த தயாராக இல்லை.

“வட கொரியா தங்கள் மீதுள்ள தடைகளை முழுமையாக நீக்க வேண்டும் என்று கோரியது. ஆனால் அவர்கள் கோரிக்கையை ஏற்க முடியவில்லை. நாங்கள் எதிர்பார்ப்பதை அவர்கள் செய்யத் தயாராக இல்லை. செய்தால், தடைகளை முழுமையாக நீக்க வேண்டும் என்று தான் விரும்புகிறோம்.

அமெரிக்காவின் எதிர்பார்ப்புக்கும் வட கொரியாவின் தயார் நிலைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. குறிப்பாக, அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக, முக்கியத்துவம் அல்லாத அம்சங்களில் அவர்கள் சமரசம் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

ஆனால் அது அமெரிக்காவுக்கு ஏற்புடையது அல்ல. அவர்கள் மீதான தடை அனைத்தும் அமுலில் இருக்கின்றன.

அதே நேரத்தில், இனி புதிதாக எந்தவித அணு ஆயுத சோதனையும் நடத்த மாட்டோம் என தெரிவித்திருக்கிறார். அந்த வார்த்தையை அவர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதே நேரத்தில், மைக் பொம்பியோ, வட கொரிய அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசுவார்.

இன்றைய பேச்சுவார்த்தையின்போது, உடன்படிக்கைக்கான ஆவணங்களை அமெரிக்கா தயாராக வைத்திருந்த போதிலும், இது அதற்கான தருணம் அல்ல என்பதை உணர்ந்திருக்கிறோம்.

வட கொரியாவுக்கு பொருளாதார ரீதியாக பெரும் உதவிகளைச் செய்யவும் தயாராக இருக்கிறோம். ஆனால், அமெரிக்காவின் நிலைப்பாட்டை அவர்கள் ஏற்க வேண்டும்.

வட கொரியாவுக்கு சீனாவும், ரஷ்யாவும் உதவிகரமாக இருக்கின்றன. குறிப்பாக, 93 வீதம் பொருட்கள் சீனாவிலிருந்துதான் வட கொரியாவுக்கு இறக்குமதியாகின்றன.

இன்றை பேச்சுவார்த்தையின்போது சீனாவைப் பற்றியும் விரிவாகப் பேசப்பட்டது” என்றார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்.

“இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக வட கொரியா நீண்ட தூர இலக்குகளை தாக்கும் வகையிலான ஏவுகணை சோதனை அல்லது அணு ஆயுத சோதனைகள் போன்றவற்றைச் செய்யாது என கிம் உறுதியளித்திருந்தார். நான் இந்த உறவை தக்க வைக்கவே விரும்புகிறேன். வரும் காலங்களில் என்ன நடக்கிறது என பார்ப்போம்” என டிரம்ப் கூறியுள்ளார்.

வட கொரியா யாங்பியானில் உள்ள அணுஆயுத உலைகளை அகற்ற தயாராக உள்ளதாக கிம் கூறினார். ஆனால் தன் மீதான அனைத்து தடைகளை நீக்க வேண்டும் என்கிறார் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தென் கொரியா, வட கொரியா மற்றும் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு அனைத்து முன் முயற்சிகளையும் எடுத்தது.

இந்த பேச்சுவார்த்தை எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பத்திரிகையாளர்கள் தென் கொரிய ஜனாதிபதி மூனுக்கு என்ன பதில் கூறுவீர்கள் என்று வினவினார்கள்.

“மூனின் ஆட்சிக்காலம் விரைவில் முடியப் போகிறது. அவர் வட கொரியாவுடனான இணக்கத்திற்காக அனைத்து முயற்சிகளையும் எடுத்தார். கிம் ஜொங் உன்னுடன் பேச்சுவார்த்தையும் நடத்தினார்” என்று டிரம்ப் பதிலளித்தார்.

வட கொரியா மீது மேலும் அதிகமான பொருளாதார தடைகள் விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு, “ஏற்கனவே அந்நாட்டின் மீது வலுவான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன” என்றார் டிரம்ப்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பை முடித்த டொனால்ட் டிரம்ப், “நான் எனது விமானத்திற்கு திரும்ப இருக்கிறேன். அங்கிருந்து ஒரு அற்புதமான இடத்திற்கு செல்ல இருக்கிறேன். அந்த இடத்திற்கு வொஷிங்டன் டி.சி என்று பெயர்” என கூறினார்.

கடந்த புதன்கிழமை நடந்த சந்திப்பில் செய்தியாளர்கள் சுருக்கமான கேள்விகள் கேட்கவே அனுமதிக்கப்பட்டனர். மேலும் இரு நாட்டு தலைவர்களும் தனியாக சந்தித்து பேசினார்கள்.

அன்று இரவு விருந்தில் இரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர். அப்போது அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் கிம்மின் மூத்த இராஜாங்க தூதுவர் கிம் யொங் சோல் உடனிருந்தனர்.

கிம்முடனான சந்திப்புக்கு பின்னர் டிரம்ப் தனது ட்வீட்டில், “வியட்நாமில் வட கொரியாவின் கிம் ஜொங் உன் உடனுனான இரவு விருந்தும் சந்திப்பும் அருமையாக இருந்தன. பேச்சுவார்த்தை நல்லபடியாக நடைபெற்றது” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, புதன்கிழமை சந்திப்பின்போது, கொரிய போர் முறைப்படி அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்படுமா என செய்தியாளர்கள் கேட்டபோது, “பார்க்கலாம்...” என்றார் டிரம்ப். எனினும் அவ்வாறான அறிவிப்பு வெளிவரவில்லை.

Fri, 03/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை