சனத்தின் தடையை நீக்க உதவுமாறு அர்ஜுன கோரிக்கை

சனத்தின் தடையை நீக்க உதவுமாறு அர்ஜுன கோரிக்கை-Arjuna Request Sports Ministry to Help to Remove Sanath's Ban

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், இலங்கை அணியின் தெரிவுக் குழுவின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரியாவிற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் விதிக்கப்பட்டுள்ள இரண்டு வருடத் தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவரும், அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

விளையாட்டு அமைச்சர் ஹரீன் பெனாண்டோ மற்றும், விளையாட்டு அமைச்சுக்கும் அவர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஐ.சி.சியின் ஊழல் மோசடிகள் தொடர்பான நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் சனத் ஜயசூரியாவிற்கு 2 வருட போட்டித் தடையை விதிப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவு கடந்த மாதம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதன்படி, குறித்த காலப்பகுதியில் கிரிக்கெட் தொடர்பான எந்தவொரு செயற்பாடுகளிலும், நிகழ்ச்சிகளிலும் அவருக்கு ஈடுபட முடியாதெனவும் தடை விதிக்கப்பட்டது.

ஐ.சி.சியினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகளுக்கு சனத் ஜயசூரிய ஒத்துழைப்பு வழங்கவில்லையெனவும், சாட்சியங்களை வைத்திருந்தும் அவர் வழங்க மறுத்துவிட்டதாகவும் ஐ.சி.சியின் ஊழல் தடுப்புப் பிரிவினால் குற்றம் சுமத்தப்பட்டதுடன், அதன்பிறகு போட்டித் தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், தான் எந்த மோசடிகளிலும் ஈடுபடவில்லையெனத் தெரிவித்திருந்த சனத் ஜயசூரிய, கிரிக்கெட் மீதான காதலால் ஐ.சி.சியின் ஊழல் தடுப்புப் பிரிவினால் விதிக்கப்பட்ட தடையை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில், கடவத்தை பகுதியில் உள்ள விகாரையொன்றில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளுக்குப் பிறகு சனத் ஜயசூரியாவின் தடை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கருத்து வெளியிடுகையில்,

கையடக்கத் தொலைபேசியை வழங்க மறுத்த காரணத்தால் சனத் ஜயசூரியாவுக்கு ஐ.சி.சியினால் தடைவிதிக்க முடியாது. அதற்காக அவரை கிரிக்கெட்டிலிருந்து வெளியேற்றவும் முடியாது. இவ்வாறானதொரு குற்றச்சாட்டுக்காக அவருக்கு போட்டித்தடை விதிப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஐ.சி.சியின் இந்த சட்டமானது என்னை வியப்படையச் செய்துள்ளது.

இலங்கையின் கிரி;க்கெட்டுக்கு சனத் ஜயசூரிய பாரிய சேவையாற்றியவர். அதன் வளர்ச்சிக்கும் அவர் மிகப் பெரிய பங்களிப்பினை வழங்கியுள்ளார். அதனால் சனத் ஜயசூரியாவிற்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடைக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உதவுவதற்கு முன்வரவேண்டும். அவ்வாறு அவர்கள் முன்வராவிட்டால் விளையாட்டுத்துறை அமைச்சர் தலையிட்டு இதற்கு உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல, சனத்தை கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓரங்கட்டப்படுவதை நான் முற்றாக எதிர்கிறேன். எனினும், சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளை விசாரணை செய்ய வேண்டும்.

எனவே சனத் மீண்டும் இலங்கையின் கிரிக்கெட் வளர்ச்சிக்காக உதவுவதற்கு முன்வர வேண்டும். குறித்த விடயம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நேரடியாகத் தலையிட்டு உண்மையான குற்றவாளிகளை இனங்காண வேண்டும் என தெரிவித்தார்.

(பீ.எப். மொஹமட்)

Fri, 03/22/2019 - 11:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை