உஷ்ணமான காலநிலை; நான்கு மாவட்டங்களுக்கு தீவிர எச்சரிக்கை

உயர்வடைந்துவரும் வெப்பநிலைக் காரணமாக இன்று புத்தளம், மன்னார், மொனராகலை மற்றும் குருணாகல் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு வானிலை அவதான நிலையம் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதேவேளை மேல்,சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கடும் மழை பெய்யுமென்றும் வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. 

வடமேல் மாகாணத்தின் புத்தளம், குருணாகல் மாவட்டத்திலும் மன்னார், மொனராகலை மாவட்டங்களிலும் இன்று 32முதல் 41டிகிரி வரை வெய்யில் சுட்டெரிக்குமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதிதீவிர உஷ்ண நிலைக் காரணமாக உடல் உபாதைகள் ஏற்படுவதுடன் Sun Stroke (பக்கவாதம்) போன்ற நோய்கள் உருவாக வாய்ப்புள்ளதனால் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இக்காலப்பகுதியில் தேவையானளவு நீர் அருந்துவதுடன் நிழலான இடங்களில் இருக்க வேண்டுமென்றும் வயதானவர்கள் மற்றும் நோயாளர்களிடத்தே கூடுதல் கவனம் தேவையென்றும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அத்துடன் குழந்தைகளை எங்கும் கவனிப்பாரற்று தனித்துவிட்டுச் செல்லக்கூடாது என்றும் வெட்டவெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

மழை பெய்யுமென எச்சரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 100 மில்லிமீற்றரிலும் அதிக மழை பெய்யுமென்றும் அச்சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசலாமென்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.  இடி, மின்னலுடன் மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் பாதுகாப்பான இடங்களின் கீழ் இருக்குமாறும் மரங்களின் கீழ், வயல்வெளிகள், மைதானங்களில் நிற்பதனையும் நீர் நிலைகளில் நீராடுவதையும் தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.   அத்துடன் கையடக்கத் தொலைபேசிகளில் உரையாடுவதை தவிர்க்குமாறும் திறந்த வாகனங்கள் மற்றும் சைக்கிள்களில் பயணம் செய்ய வேண்டாமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

(லக்ஷ்மி பரசுராமன்)

Fri, 03/22/2019 - 08:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை