புதிய ஆட்சியில் சகல பிரச்சினைக்கும் தீர்வு; சகலரும் ஒத்துழைப்பு வழங்குங்கள்

இந்த அரசாங்கத்திற்குத் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க இடமளிக்க முடியாது. புதிய ஆட்சியில் சகல பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். ஆதலால், அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, 52 நாள் நீடித்த ஆட்சியினாலே நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாக நிதி அமைச்சர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

2015 ஜனவரி 8ஆம் திகதி முதல் 2019 மார்ச் 5ஆம் திகதி வரையும் ஆட்சி செய்து 1516 நாட்களில் 1464 நாட்களாக பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க இந்த பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பு கூறத் தேவையில்லை என்பதே அவரது கருத்தாகும். எவ்வாறாயினும் எமது அரசாங்கம் 19 நாட்களுக்கே ஆட்சியில் இருந்தது. அந்த காலப்பகுதியில் மக்களுக்கு தேவையான மானியங்களை பெற்றுக்கொடுப்பதற்கு நாங்கள் நடவடிக்கையெடுத்திருந்தோம். எவ்வாறாயினும் வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வருவதற்கு நடவடிக்கையெடுத்தாலும் குறித்த சிறிது காலத்திற்குள் அதனைச் செய்ய முடியாது போனது. 2005 முதல் யுத்தத்திற்கு மத்தியிலும் 6.5 வீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை பேண முடிந்தது. எமது வரலாற்றில் அதிகமான பொருளாதார வேகமாக அதுவே இருந்தது.

சர்வதேச சவால்களுக்கு மத்தியிலும் நாங்கள் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பினோம். தற்போது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 4 வருடங்களில் அரசாங்கம் வரிகளை இரண்டு மடங்கினால் அதிகரித்துள்ளது. நாட்டை கடன் பொறிக்குள் தள்ளியுள்ளது. எமது ஆட்சியில் பெறப்பட்ட கடன் மூலம் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டதுடன் யுத்தத்திற்காகவும் செலவிடப்பட்டது

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்

Wed, 03/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை