இரு பள்ளிவாசல்களுக்குள் சரமாரிச் சூடு; 49 பேர் பலி

50 பேர் படுகாயம்

துப்பாக்கிதாரி அவுஸ்திரேலிய பயங்கரவாதி

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரிலுள்ள இரண்டு முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று ஜும்ஆ தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நவீன ரக ஆயுதங்களுடன் நுழைந்த துப்பாக்கிதாரிகள் சரமாரியாக சூடு நடத்தினர்.

உயிர் பிழைப்பதற்காக தப்பியோடியவர்களையும் துப்பாக்கிதாரிகள் துரத்தித் துரத்தி சுட்டனர். இதனை முகநூலூடாக நேரலை செய்தனர்.

கிறிஸ்ட்சர்ச் நகரிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசலில் நேற்று ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த நபர், தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டு அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். சிலர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இரத்தக் காயங்களுடன் வெளியே ஓடினர்.

தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆயுதப்படை பொலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல் அருகிலுள்ள மற்றொரு பள்ளிவாசலிலும் மற்றொரு நபர் துப்பாக்கி சூடு நடத்தினார்.

இரண்டு இடங்களிலும் நடந்த தாக்குதல்களில் 40 பேர் கொல்லப்பட்டதாக நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆண்டர்ன் ஊர்ஜிதப்படுத்தினார். நியூசிலாந்து நேரப்படி இரவு 9 மணி நிலவரப்படி பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்தது. சுமார் 50 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தியதை அந்த நபர்கள் முகநூல் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பியுள்ளனர்.

தாக்குதலைத் தொடர்ந்து நகரின் அனைத்து வீதிகளும் மூடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தாக்குதல் தொடர்பாக ஒரு பெண் உட்பட 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இத் தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் நியூசிலாந்து வரலாற்றில் இது ஒரு கறுப்பு தினம் என்றும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தாக்குதல் நடந்திருப்பதாக கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து பள்ளிவாசல் மீது துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதியொருவர் என நியூஸிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அதிலிருந்த வெடிபொருட்கள் செயலிழக்கச் செய்யப்பட்டன. நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தடுப்பு படை பொலிசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி சூடு குற்றவாளி "ப்ரெண்டான் டாரன்ட்" என்று பெயரிடப்பட்ட ஒரு ஆஸ்திரேலியராக ட்விட்டரில் தன்னை அடையாளம் காட்டியுள்ளார். 73 பக்கத்தில் தனது நோக்கங்களை அதில் அவர் தெரிவித்துள்ளார். நியூஸிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரில் ஒருவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதி என அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசனும் உறுதி செய்துள்ளார். விசாரணைக்கு உதவுவதாக ஆஸ்திரேலிய அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

Sat, 03/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை