புளோரிடா காபன் பரிசோதனையில் தெரிவிப்பு
மன்னார் மனித புதைகுழியில் பெறப்பட்ட மாதிரிகள் 1400 - 1650 (கி.பி. 1400 - 1650) ஆம் ஆண்டு காலப்பகுதிக்குரியது என கண்டறியப்பட்டுள்ளன.
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் உடல்கூற்று காபன் பரிசோதனை அறிக்கையானது சட்டபூர்வமாக நேற்று (6) கிடைக்கப் பெற்றதன் பின்னர் இன்று (07) வியாழக்கிழமை குறித்த அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் கடந்த மாதம் காபன் பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரி தலைமையில் அமெரிக்காவில் உள்ள புளோரிடவில் உள்ள ஆய்வு கூடத்திற்கு மேலதிக ஆய்வுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
குறித்த பரிசோதனை அறிக்கை 14 நாட்களில் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் நேற்று (06) குறித்த அறிகையானது சட்ட ரீதியான ஆவணமாக மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு கிடக்கப் பெற்றது.
அதற்கமைய, குறித்த மாதிரிகள் கி.பி 1400 இற்கும் 1650 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குரியது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த அறிக்கையின் விவரங்களை அறிவதற்கான செயற்பாடுகள் நிபுணர்குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறித்த மனித புதை குழி அகழ்வு பணிகளை பார்வையிடுவதற்காக இலங்கைகான பிரித்தானிய தூதரக அதிகாரிகள் இன்று (07) காலை 10.30 மனிக்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டு குறித்த அகழ்வு பணிகள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொண்டனர்
இதுவரை குறித்த மனித புதைகுழியில் இருந்து 336 மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 318 மனித எச்சங்கள் முழுமையாக வெளியே எடுக்கப்பட்டுள்ளன.
(மன்னார் குறூப் நிருபர் - லம்பர்ட் ரொசாரியன்)
from tkn