கல்முனை UDA காரியாலயத்தை மூடும் நடவடிக்கை நிறுத்தம்

RSM
கல்முனை UDA காரியாலயத்தை மூடும் நடவடிக்கை நிறுத்தம்-Kalmunai UDA Office at Kalmunai MC

மாநகர சபை கட்டடத்தில் இடமளிக்க ஏற்பாடு

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப் பிராந்தியக் காரியாலயத்தை மூடிவிட்டு அதனை அம்பாறை நகரக் காரியாலயத்துடன் இணைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை கைவிடப்பட்டு, அதனை கல்முனை மாநகர சபையில் இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

தனது வேண்டுகோளின் பேரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான சட்ட முதுமாணி ரவூப் ஹக்கீம், உள்ளூராட்சி, மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் ஆகியோர் எடுத்துக் கொண்ட அவசர நடவடிக்கையின் பயனாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளார்.

கடந்த பல வருடங்களாக தனியார் கட்டடமொன்றில் இயங்கி வருகின்ற நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப் பிராந்தியக் காரியாலயத்திற்கு சொந்தக் கட்டிடம் இல்லாத விடயத்தையும் வாடகைப் பணம் அதிகம் செலுத்தப்படுவதாகவும் காரணம் காட்டி கடந்த வாரம் அதனை மூடிவிடுவதற்கான உத்தாவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப் பிராந்தியக் காரியாலயத்தை தொடர்ந்தும் கல்முனையில் இயங்க வைக்கும் பொருட்டு அக்காரியாலயத்திற்கு கல்முனை மாநகர சபையில் இடமளிப்பதற்கு தீர்மானம் மேற்கொண்டதுடன் அதற்கான இணக்கத்தைத் தெரிவித்து நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைமையகத்திற்கு அவசர கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்ததாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், உள்ளூராட்சி, மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் துரிதமாக செயற்பட்டதன் பயனாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் கலாநிதி ஜகத் முனசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை இதற்கான அங்கீகாரக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

இதன் பிரகாரம் அடுத்த ஒரு சில தினங்களில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப் பிராந்தியக் காரியாலயத்தை கல்முனை மாநகர சபை கட்டடமொன்றுக்கு இடமாற்றுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் தெரிவித்தார்.

(கல்முனை விசேட நிருபர் - எம்.ஐ. சம்சுதீன்)

Wed, 02/13/2019 - 10:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை