ஐ,தே.க. எம்.பி சமிந்த விஜேசிறி பிணையில் விடுதலை

Rizwan Segu Mohideen
ஐ,தே.க. எம்.பி சமிந்த விஜேசிறி பிணையில் விடுதலை-UNP Badulla District MP Released on Bail

பொலிஸ் கான்ஸ்டபிள் மீது தாக்கிய குற்றச்சாட்டு

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில் பதுளை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) பண்டாரவளை நகரில் வைத்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் (13) பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார்.

பொலிஸ் போதை தடுப்பு பிரிவு பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.சி. மெதிவத்தகே உடன், அவரது உத்தியோகபூர்வ வாகனத்தில் பயணித்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் மீது பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் மூலம் நீதிமன்றில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினரை, பண்டாரவளை நீதவான் கீர்த்தி கும்புரேஹேன முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவரை ரூபா 5 இலட்சம் கொண்ட சரீரப் பிணை மற்றும் ரூபா 10 ஆயிரம் ரொக்க பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அது தவிர வாராந்தம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறும், நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரின் சாரதி நேற்று முன்தினம் (11) கைது செய்யப்பட்டதோடு, அவருக்கு எதிர்வரும் பெப்ரவரி 18 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

Wed, 02/13/2019 - 16:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை