பிறந்த இரட்டைக் குழந்தைகள் உரப்பையில் இட்டு கொலை

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தாய் கைது

லோரன்ஸ் செல்வநாயகம்

 ஹோமாகம பகுதியில் தாயொருவர் தாம் பிரசவித்த இரட்டைக் குழந்தைகளை பையொன்றில் இட்டு கொன்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.  

இத் தாய் 30வயதானவரென்றும் அவருக்கு ஏற்கனவே 5வயது பிள்ளையொன்று உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

சந்தேகநபரான தாய் அதிக இரத்தப் போக்குக் காரணமாக ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். ஹோமாகம போதனா வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற சென்றபோது அதிக இரத்தப் போக்குக்கான காரணம் தொடர்பில் மருத்துவர் வினவிய போதே அத்தாய் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.  

மேற்படி குழந்தை தமது கள்ளத்காதல் தொடர்பின் மூலம் பிறந்த குழந்தைகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து மேற்படி தாய் வசித்த வாடகைவீட்டுக்கு பொலிஸார் சென்று சோதனையிட்ட போது அங்கு கதவு மூலையில் உரப்பையில் போடப் பட்டிருந்த பிறந்த இரட்டைக் குழந்தைகளின் சடலங்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். இதற்கிணங்க அப்பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.  

அக்குழந்தைகள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பிறந்திருக்கலாம் என்றும் தமது கள்ளத் தொடர்பினால் பிறந்த குழந்தைகள் என்பதால் அத்தாய் அவ்வாறு செயற்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். (ஸ)

Wed, 02/06/2019 - 11:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை