வருடாந்தம் ரூ.25 இலட்சம் வருமானம்
எம்பிலிப்பிட்டிய, கேகாலையிலும் ஆரம்பிக்க திட்டம்
பலாங்கொடை நகரசபையின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள கழிவுப்பொருட்களை மீள்சுழற்சி செய்யும் வேலைத்திட்டம் ஏனைய உள்ளூராட்சி சபைகளிலும் ஆரம்பிக்கப்படும். இவ்வேலைத்திட்டமானது இம்மாகாணத்தில் உள்ள ஏனைய உள்ளுராட்சி சபைகளுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
ஏனைய உள்ளூராட்சி சபைகளிலும் இவ்வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க தெரிவித்தார்.
பலாங்கொடை நகரசபையின் மூலம் பலாங்கொடை பெங்கியவத்த பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கழிவுபபொருட்களை மீள்சுழற்சி செய்யும் வேலைத்திட்டத்தை நேரில் சென்று பார்வையிட்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையில் கழிவு பொருட்களை மீள்சுழற்சி செய்யும் சிறந்த இடமாக பலாங்கொடை நகரசபை விளங்கி வருகின்றது.
பலாங்கொடை நகர சபையின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள கழிவுப்பொருட்களை மீள்சுழற்சி செய்யும் வேலைத்திட்டம் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள எம்பிலிபிட்டிய, கேகாலை ஆகிய இரண்டு நகர சபைகள் உட்பட 25 பிரதேச சபைகளிலும் உள்ளடக்கி விரைவில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
பலாங்கொடை நகர சபையின் மூலம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ள மேற்படி வேலைத்திட்டத்தின் மூலம் நாளாந்தம் 15 தொன் பொருட்கள் மற்றும் 15000 மலசல கழிவுகள் மீள்சுழற்சி செய்யப்படுகின்றன. அதன் மூலம் வருடத்திற்கு 25 இலட்சம் ரூபா வருமானத்தை பலாங்கொடை நகரசபை பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
காவத்தை தினகரன் விசேட நிருபர்
from tkn