முஸ்லிம்களின் பிரச்சினைக்கு அரபு நாடுகள் உதவும் என்று நினைப்பது முட்டாள்தனம்

தமிழர்களுக்கு பிரச்சினை என்றால் பேசுவதற்கு சர்வதேசம் இருக்கின்றது. முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் வருகின்ற போது அரபு நாடுகள் எங்களுக்கு வந்து உதவும் என்று நினைத்து விடக்கூடாது. அது ஒரு போதும் நடக்காது. அவ்வாரு நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள் என்றால் அதைவிட முட்டாள்தனம் வேரு எதுவும் கிடையாது என்று விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டார ரீதியாக தெரிவு செய்யப்பட்ட இளைஞர் அமைப்பாளர்களுக்கு கட்சியின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நேற்று இரவு (18) மீராவோடை அந்நூர் கலாச்சார மண்டபத்தில் கல்குடா தொகுதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் எம்.எப்.ஜெவ்பர் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஐக்கிய தேசிய கட்சியினர் ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஜனாதிபதி உடனடியாக மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்படி நடத்தி மஹிந்தவோடு சேர்ந்து ஜனாதிபதி வேட்பாளராக வரமுடியும் என்று அவர் கனவு காண்கின்றார். அது நடக்காது.

மாற்றத்தை நோக்கிய பயணத்திலே இந்த இளைஞர் அமைப்புக்கள் செல்ல வேண்டும். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் என்றால் அது நம்பிக்கைக்குறியவர்கள், ஒரு மாற்றத்திற்கான இளைஞர்கள், தான் சார்ந்த சமுகம், தனது பிரதேசம் என்பவற்றில் மதிப்புக்குறிய இளைஞர்கள் என்று பெயரை பெற்றுக் கொள்கின்றவர்களாக திகழ்வதோடு அரசியல்வாதிகள் செய்கின்ற அபிவிருத்தி வேலைகளுக்கு பங்களிப்பு செய்கின்றவர்களாகவும் திகழ வேண்டும்.

இன்று தமிழர்களுக்கு பிரச்சினை என்றால் பேசுவதற்கு சர்வதேசம் இருக்கின்றது. சிங்கள சமுகத்திற்கு இருக்கின்ற அரசியல் பின்னணி எங்களுக்குக் கிடையாது. நீங்கள் யாரும் பிரச்சினைகள் வருகின்ற போது அரபு நாடுகள் எங்களுக்கு வந்து உதவும் என்று நினைத்து விடக்கூடாது. அது ஒரு போதும் நடக்காது. அவ்வாரு நீங்கள் நினைத்துக் கொள்வீர்கள் என்றால் அதைவிட முட்டாள்தனம் வேரு எதுவும் கிடையாது. மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சினைகளை எந்த ஒரு முஸ்லிம் நாடும் தட்டிக்கேட்கவில்லை. ஒவ்வொரு நாடும் அவர்களது தேவைக்காகத்தான் நடந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

(கல்குடா தினகரன் நிருபர் - எஸ்.எம்.எம்.முர்ஷித்)

Tue, 02/19/2019 - 15:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை