அடுத்த பத்தாண்டுகளில் நாட்டில் பலம் மிக்கதும் ஸ்திரமானதுமான தேசிய தலைமைத்துவம் ஏற்படுத்தப்பட்டால்தான் நீண்டகால அரசியல் சவால்கள் மற்றும் ஏனைய விடயங்களை எதிர்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய கூறினார்.
“ஸ்திரமும் சுபீட்சமுமான இலங்கையை உருவாக்க வேண்டுமானால், மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இதனைச் செய்ய வேண்டுமானால் நாம் அனைவரும் கைகோர்க்க வேண்டும்” என்று சபாநாயகர் மேலும் கூறினார்.
“71 வருடங்களுக்கு முன் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தபோதிலும், பலம்மிக்க தேசிய தலைமைத்துவம் இன்னும் நாட்டில் உருவாகவில்லை. எமது நாட்டில் இயற்கை வளமும் மனித வளமும் நிறைந்துள்ளது.
எனவே, அதனை அமைதியும் சுபீட்சமும் உள்ளதாக மாற்றுவது ஒன்றும் சிரமமானவிடயமல்ல. நாட்டில் பலம்மிக்க தேசிய தலைமைத்துவம் இருந்தால்தான் இது சாத்தியமாகும். அவ்வாறான தலைமைத்துவம் இன. மத பேதமின்றி அனைவரையும் சமமாக மதிப்பதாக இருக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.
பெப்ரல் அமைப்பின் 30ஆவது வருட நிறைவு நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சபாநாயகர் இவ்வாறு கூறினார்.
நாட்டில் சுதந்திரமும் நியாயமுமான தேர்தல் நடப்பதை உறுதிசெய்ய பெப்ரல் வழங்கும் பங்களிப்பை சபாநாயகர் பாராட்டினார்.
அத்துடன், 1999இல் வயம்பவில் நடைபெற்ற தேர்தல் மிகவும் மோசமான தேர்தலாக இருந்தது என்று சபாநாயகர் கூறினார்.
அத்தேர்தலில் வாக்காளர்களின் ஆள் மாறாட்டம், தேர்தல் அதிகாரிகளை அச்சுறுத்தியமை மற்றும் ரவுடித்தனம் ஆகியவை பரந்த அளவில் இடம்பெற்றதாக சபாநாயகர் மேலும் கூறினார்.
பெப்ரல் அமைப்பு எப்போதுமே பக்கம் சாராது நடுநிலையில் செயற்படுவதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.
from tkn