உதயபுரம் தமிழ் மகா வித்தியாலய விளையாட்டரங்கை அமைச்சர் மனோகணேசன் திறந்துவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டரங்கை தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் மற்றும் சமூகமேம்பாடு, இந்துசமய விவகார அமைச்சர் மனோகணேசன் இன்று (12) பிற்பகல் திறந்துவைத்தார்.

பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில் அமைச்சர் மனோகணேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள் மற்றும் சமூகமேம்பாட்டு, இந்துசமய விவகார அமைச்சின் 20 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் இந்த விளையாட்டரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பாஸ்கரா, அமைச்சரின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கா.கோபிநாத், அமைச்சின் மேலதிக செயலாளர் இரா. ரவீந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோவில் போரதீவு மகா வித்தியாலயம், பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம் ஆகியவற்றில் நடைபெறும் அபிவிருத்தி பணிகளையும் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவற்றினை துரிதப்படுத்துமாறும் பணிப்புரை வழங்கினார்.

(கல்லடி குறூப் நிருபர்– உதயகுமார் உதயகாந்த்)

Tue, 02/12/2019 - 14:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை