தொழில் வழிகாட்டல் தேசிய மத்திய நிலையத்தின் முதலாவது நிலையம் திறப்பு

-இளமையின் எதிர்கால நுழைவாயிலை திறக்கும் 'ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா' தொழில் வழிகாட்டல் நிறுவன வலையமைப்பை கட்டியெழுப்பும் திட்டம் ஆரம்பம்

-இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்துச் சவால்களையும் வெற்றிகொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் –ஜனாதிபதி

இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலமொன்றைக் கட்டியெழுப்புவதிலுள்ள அனைத்துச் சவால்களையும் வெற்றிகொள்வதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவையில் நேற்று (08) தொழில் வழிகாட்டல் தேசிய மத்திய நிலையத்தின் முதலாவது மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, ஜனாதிபதி இவ்வாறு  தெரிவித்தார்.

இலங்கையில் வேலைவாய்ப்பில்லாத பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்கி, அனைத்துத் தொழிற்பயிற்சி தொழில் வழங்கல் மத்திய நிலையங்களையும் ஒன்றுதிரட்டி,  உயர் தொழில்நுட்ப முறைமைகளின் மூலம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதையும் தொழில் வாய்ப்புக்களை வழங்குவதையும் நோக்கமாகக்கொண்டு இலங்கை தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டம் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இலங்கை தொழில் வழிகாட்டல் நிறுவனம் ஜனாதிபதி அலுவலகத்தின் 'ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா' நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இளைஞர், யுவதிகள் தாம் தெரிவுசெய்த தொழிற்றுறையில் வெற்றிகரமாகப் பயணிக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தல், தொழில் முயற்சிக்கான சந்தர்ப்பங்கள்,  தொழில் வங்கிகள் உள்ளிட்ட வலையமைப்புத் தொழில்த்தகவல் சேவையொன்றை வழங்குதல், தனிப்பட்ட முறையில் தொழில் வழிகாட்டல் நிபுணர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு, தொழில் வழிகாட்டல் சேவையை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துதல்,  நாடளாவிய ரீதியிலுள்ள தொழில் வழிகாட்டல் நிறுவன வலையமைப்பொன்றைக் கட்டியெழுப்புதல் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையை முதன்மையாகக் கொண்ட பேண்தகு அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் பேண்தகு வாழ்வாதார அபிவிருத்தியை நோக்கி இளைஞர்களை வழிப்படுத்துதல்,  இளந்தலைமுறையினர் மத்தியில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை குறைத்தல், இயற்கை வளங்களை உரிய முகாமைத்துவத்துடன் பயன்படுத்தக்கூடிய புதிய கைத்தொழில் மற்றும் முதலீடுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்துதல் போன்ற பூகோள இலக்குகள் இதன் மூலம் நிறைவேற்றப்படுகின்றன.

தமது தகைமைகளுக்கேற்ப தொழிலொன்றை பெற்றுக்கொள்வது எங்கே என்ற பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு இளைஞர்,  யுவதிகளுக்கு எதிர்காலத்திலுள்ள பிரதான நிறுவனமாக இலங்கை தொழில் வழிகாட்டல் நிறுவனம் மாறுமென்பதுடன், தொழில் கேட்டு அரசியல்வாதிகளின் பின்னால் செல்லும் யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்' என்றார்.

மேலும், இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதிலுள்ள முக்கிய சவால்களில் ஒன்று உளப்பாங்கு ரீதியான மாற்றத்திற்கும் இடர்நிலைமைகளை பொறுப்பேற்கும் இளைஞர் தலைமுறை தயாராக இல்லாதிருப்பதாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்கு இப்புதிய திட்டம் சிறந்த உதவியாக இருக்குமென்றார்.

எதிர்வரும் 03மாதங்களில் இந்தத் தொழில் வழிகாட்டல் நிறுவனத்தை அனைத்து மாவட்டங்களிலும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து, தொழில் வழிகாட்டல் நிலையத்தை திறந்து வைத்து, ஜனாதிபதி அதனைப் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசிங்க, மஹிந்த அமரவீர, ரவீந்ர சமரவீர, இசுர தேவப்பிரிய,  சாந்த பண்டார,  எரிக் வீரவர்த்தன ஆகியோர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட ஆளுநர்கள், மாகாண முதலமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளும் பெருமளவான இளைஞர்,  யுவதிகளும் கலந்துகொண்டனர்.

Sat, 02/09/2019 - 16:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை