சுதந்திர தினத்தன்றாவது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்

மன்னார் பிரஜைகள் குழு ​கோரிக்கை

தமிழ் மக்களின் உரிமையையும்,வேண்டுகோளையும் அரசு மதித்து பல ஆண்டு காலமாக உரிமைகள் இழந்து சிறைவாசம் அனுபவித்துவரும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் சுதந்திர தினத்திலாவது விடுதலை செய்யப்பட வேண்டும் என மன்னார்

பிரஜைகள் குழு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மன்னார் பிரஜைகள் குழு நேற்று (01) இது தொடர்பாக ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இவ் வருட சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ் மக்களின் உரிமையையும், வேண்டுகோளையும் அரசு மதித்து பல ஆண்டுகளாக அடிமைகளாக உரிமை இழந்து பல வருட காலமாக சிறைவாசம் அனுபவிக்கும் எமது தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு அனைத்து தமிழ் மக்கள் சார்பாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு, அரசை மிகவும் வினையமாக கேட்டுக்கொள்கிறது. தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் உயிரோடு அறுக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, பொன்னான வாழ்வின் பொற் காலம் சிறையில் வீணடிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் பொருளின்றி, பிடிப்பின்றி, குடும்பம், பிள்ளைகள், உறவுகள் என்ற உணர்வின்றி, நடைபிணங்களாக நான்கு சுவருக்குள் அடிமைகளாக எந்த வித உரிமையும் இன்றி உயிர் வாழும் தமிழ் அரசியல் கைதிகளை இந்த வருட சுதந்திர தினத்திலாவது அவர்களை விடுதலை செய்து சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும்.

அவர்களின் இல்லங்களிலும், தமிழ் மக்களின் உள்ளங்களிலும் ஒளியேற்றுமாறு நாட்டுத்தலைவரையும், அரசையும், நீதித்துறையையும் ஆணித்தரமாக கேட்டு நிற்கின்றோம் என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் குறூப் நிருபர்

Sat, 02/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை