கிராமசக்தி மக்கள் இயக்கத்தை துரிதப்படுத்த தேசிய வாரம் பிரகடனம்

மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்த ரூ.450மில். நிதி 

கிராமசக்தி மக்கள் இயக்கத்தை வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள நகர மக்களையும் இலக்காக கொண்டு நடைமுறைப்படுத்தபட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார். 

இவ்வருடம் கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை பகிர்ந்தளிப்பதை துரிதப்படுத்துவதற்காக நேற்று முதல் கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  

கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் மேல் மாகாண செயற்குழுக் கூட்டம் நேற்று (18)  விளிம்புல, ஹேனேகம பிரதேசத்தில் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது. 

நாட்டில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் சிறிய வியாபாரங்களை பதிவு செய்யும் போது அறவிடப்படும் கட்டணத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி   தெரிவித்தார் 

வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி அலுவலகத்தின் முக்கிய நிகழ்ச்சித்திட்டமாக கிராமசக்தி மக்கள் இயக்கம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தற்போது கிராமிய வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை இலக்காகக்கொண்டு இத்திட்டம் திறமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

கிராமிய மற்றும் நகர மட்டங்களில் பெருமளவான மக்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி , அம்மக்களை இலக்காகக்கொண்டு 2019ஆம் ஆண்டிற்குரிய திட்டங்களை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் இங்கு விளக்கினார். 

இதேநேரம் 2019ஆம் ஆண்டு கிராமசக்தி மக்கள் இயக்கம் கொழும்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்காக 117மில்லியன் ரூபா நிதி ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்திற்கு 117மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதுடன், மேல் மாகாணத்தில் அதிக வறுமை நிலவும் மாவட்டமான களுத்துறை மாவட்டத்திற்கு 216மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து நிதி ஏற்பாடுகளும் குறித்த பிரதேசங்களிலுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களின் வாழ்வாதார வழிகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு உரிய முறையில் செலவிடுவது சம்பந்தப்பட்டவர்களின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி   குறிப்பிட்டார். 

மேலும் கடந்த இரண்டரை வருடகால அனுபவத்துடன் கிராமசக்தி மக்கள் இயக்கத்தை இவ்வருடம் மிகவும் வினைத்திறன்மிக்கதாக மாற்றுவதற்கு அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி   வலியுறுத்தினார். 

மேல் மாகாணத்தில் கிராமசக்தி மக்கள் இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் போது எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றிற்கு வழங்கக்கூடிய தீர்வுகள் குறித்து  இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், உற்பத்திகளுக்கான விற்பனை நிலையங்கள் தொடர்பான பிரச்சினைகள் மக்களிடமுள்ள பிற்போக்கான கருத்துக்களை நீக்கி அவர்களை வலுப்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.  

கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்ட செயலாளர்களினால் மாவட்டங்களின் கிராமசக்தி நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம் பற்றியும் எதிர்கால நிகழ்சித்திட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. 

உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் புதிய வருமான வழிகளை உருவாக்குவதற்கான சந்தர்ப்பங்களை அதிகரிப்பது கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் மற்றுமொரு நோக்கமாகும். அந்த வகையில் இன்று இரண்டு கிராமசக்தி சங்கங்களுக்கிடையே ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டது. 

இதன் மூலம் அவிசாவளை புவக்பிட்டிய தெற்கு கிராமசக்தி சங்கம் இதுவரை முகங்கொடுத்த சில முக்கியமான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர் ஜோன் அமரதுங்க, இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, லசந்த அழகியவன்ன, ஹர்சன ராஜகருணா, மேல் மாகாண ஆளுநர் அஷாத் சாலி, மேல் மாகாண முதலமைச்சர் இசுற தேவப்பிரிய உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்பு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

Tue, 02/19/2019 - 14:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை