தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடம் ஆரம்பிப்பதே தனது கனவு

அம்பாறை கரையோர மாவட்டத்தில் போதனா வைத்தியசாலை ஒன்றும் அதனைத் தொடர்ந்து தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடம் ஒன்றும் தொடங்குவதுதான் எனது கனவு என சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம்  தெரிவித்தார். 

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (10) இடம்பெற்ற சீன நிதி உதவியின் கீழான புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நடுதல் மற்றும் புதிய விடுதி திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார். 

அவர் அங்கு மேலும் கூறுகையில்,சுகாதார பிரதி அமைச்சராக  இருந்த போது சம்மாந்துறை வைத்தியசாலைக்கு கட்டடம் ஒன்று தேவை என்று அப்போது என்னிடம் வேண்டுகோள் ஒன்று முன்வைக்கப்பட்டது. தருவதாக அன்று வாக்குறுதி வழங்கினேன். இன்று அதை நிறைவேற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. 

மர்ஹூம் அன்வர் இஸ்மாயில் இருக்கும்போதே இந்தக் கட்டடத்துக்கான வரை படம் வரையப்பட்டது. அதைக் கட்டி முடிப்பதற்காக இஸ்ரேல் நிதி கிடைக்கவுள்ளது என்றும் சொல்லப்பட்டது. ஆனால்,அந்த நிதி கிடைக்கவில்லை. 

இன்னும் இரண்டு வாரங்களில் எல்லா ஆதார வைத்தியசாலைகளுக்கும் பணிப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளார்கள். 

சம்மாந்துறை வைத்தியசாலைக்கும் பணிப்பாளர் நியமிக்கப்பட்ட பின்னரே பணியைத் தொடங்குவது நல்லது என நான் நினைக்கிறேன்.  

நான்  இதுவரை 117 மில்லியன் ரூபா நிதியை இந்த வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளேன்.இப்போது திறக்கப்பட்டுள்ள புதிய கட்டடம் பெண்களின் நலன்கருதி அமைக்கப்பட்டதாகும். 

அவர்களுக்கு தனியாக ஒரு விடுதி வேண்டும் என்று டொக்டர் ஆபிதா என்னிடம் கூறினார்.

அதற்கு ஏற்ப இந்தக் கட்டட வேலைகள் தொடங்கப்பட்டு ஒன்றரை வருடங்களுக்குள் பூர்த்தியாக்கப்பட்டு விட்டது. 

இன்று அதை நாம் திறந்து வைத்துள்ளோம். இந்த வைத்தியசாலையில் இருக்கும் கட்டடங்களுள் இந்தப் புதிய கட்டடம்தான் நவீனமானதாக இருக்கின்றது. 

அம்பாறை கரையோர மாவட்டத்தில் பொது வைத்தியசாலை ஒன்று அமைக்க வேண்டும் என்பதுதான் எனது திட்டம். 

பொது வைத்தியசாலை தொடங்கப்பட்டதன் பின் அதை போதனா வைத்தியசாலையாக மாற்ற வேண்டும். அதன் பின் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடத்தைத் தொடங்க வேண்டும். இது எனது கனவு. 

வைத்தியபீடத்தை அமைக்கும் திட்டத்தை எமது தலைவர் ரவூப் ஹக்கீம் என்னிடம் கூறினார்.நான் இப்போது வேண்டாம் என்றேன்.அதற்கு முன்பு போதனா வைத்தியசாலை ஒன்று தேவை என்பதையும் அந்த வைத்தியசாலையைத் தொடங்கிவிட்டு வைத்தியபீடத்தைத் தொடங்குவோம் என்றும் அவரிடம் கூறினேன்.

கரையோர மாவட்டம் வைத்திய துறையில் தன்னிறைவு அடைய வேண்டும்.இருதய சத்திர சிகிச்சைக்கு நாம் யாழ்ப்பாணம் அல்லது பொலநறுவை போன்ற இடங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.இந்த நிலை மாற வேண்டும்.கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையை இவ்வாறான சத்திர சிகிச்சைகள் செய்யும் வைத்தியசாலையாக மாற்ற வேண்டும் என்றார். 

(சம்மாந்துறை கிழக்கு தினகரன், சம்மாந்துறை குறூப், நிந்தவூர் குறூப் நிருபர்கள்)

Tue, 02/12/2019 - 16:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை