பூமியின் வடதுருவ காந்தமுனை ரஷ்யாவை நோக்கி நகர்வு

காந்தப்புலங்கள் தலைகீழாக மாறும் அறிகுறி

ஸ்மார்ட்போன் போன்ற வழிசெலுத்தல் முறைக்கு பயன்படுகின்ற பூமியின் வட துருவ காந்த முனை அதன் சாதாரண வேகத்தை விடவும் அதிக வேகத்தில் நகர்வதால் புதிய வடிவொன்றை ஏற்படுத்துவதில் விஞ்ஞானிகள் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

வட காந்த முனையானது பூமியில் காந்தப்புலத்தை செங்குத்தாக கீழே சுட்டிக்காட்டும் புள்ளியாகும்.  

உலக காந்த முறை கடல் மற்றும் இராணுவ வழிசெலுத்தலுக்கு தீர்க்கமானது என்பதோடு ஸ்மார்ட்போன்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.  

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இது சாதாரணமாக புதுப்பிக்கப்படுவதோடு, “ஆர்டிக் பிராந்தியத்தில் திட்டமிடப்படாத மாறுபாடுகள்” அதனை ஓர் ஆண்டுக்கு முன்னரே முன்னெடுக்க வேண்டி ஏற்பட்டிருப்பதாக சுற்றுச்சூழல் தகவல் தொடர்பான அமெரிக்க தேசிய மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.  

வடக்கு கனடாவில் 1831இல் காந்த வடக்கு கண்டுபிடிக்கப்பட்டது. சில காரணங்களால் வட துருவ காந்த முனை கனடாவில் இருந்து சைபீரியாவை நோக்கி வேகமான நகர்ந்து வருகிறது. இது விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விடவும் மூன்று மடங்கு வேகமாக ஆண்டுக்கு 34மைல்கள் நகர்கிறது.  

வட காந்த முனை நோக்கி திசைகாட்டி ஊசி புள்ளிகள் உள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள இந்த வடபுல மாற்றத்தால், திசைகாட்டிகளில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்துள்ளது. எனவே, கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றில் உள்ள திசைகாட்டிகளை மேம்படுத்த வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த வேகமான நகர்வு ஸ்மார்ட்போன் மற்றும் சில நுகர்வு இலத்திரனியல் பொருட்களின் திசைமானிகளுக்கும் பிரச்சினை ஏற்படுத்துவதாக உள்ளது.  

விமானங்கள் மற்றும் கப்பல்களும் ஜி.பி.எஸ் முறை பிரச்சினை ஏற்படுத்தும்போது காந்த வடக்கை மாற்றாக பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தப்பது. 2020ஆம் ஆண்டில் ஒரு உலக காந்த திசை வழிகாட்டி மாதிரியின் ஐந்து வருடகால புதுப்பிப்பு நடவடிக்கைக்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் அது தற்போது முன்கூட்டியே நடத்தப்படவுள்ளது. ‘உலக காந்த மாதிரி’ உருவாக்கும் அமெரிக்காவின், என்.ஓ.ஏ.ஏ எனப்படும், ‘தேசிய கடல் மற்றும் வளி மண்டல நிர்வாகம்’ வட புல நகர்வை தொடர்ந்து, காந்த மாதிரியை புதுப்பித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

பூமியின் காந்தப்புலத்தின் அபூர்வமான செயற்பாட்டுக்கான காரணத்தை கண்டறிய விஞ்ஞானிகள் தொடர்ந்து முயன்று வருகின்றனர். 

பூமியின் தற்போதுள்ள இரு காந்தப்புலங்களும், 7.8 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தலைகீழாக மாறியவை எனக் கூறப்படும் நிலையில், தற்போது மீண்டும் அதே போன்றதொரு மாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Thu, 02/07/2019 - 09:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை