தேசிய அரசாங்க யோசனை ஜனாதிபதியால் நிராகரிப்பு

- இலங்கையை ஆசியாவின் பலமுள்ள நாடாக கட்டியெழுப்புவோம்

- மாகாண சபைகளில் நிதி வீண் விரயம்;   பொருளாதார அபிவிருத்தி புறக்கணிப்பு 

- வடக்கு மக்களுக்கு கடந்த 4ஆண்டுகளே நிம்மதி 

தேசிய அரசாங்கமொன்று அமைப்பதன் ஊடாக அமைச்சர்களின் எண்ணிக்ைக அதிகரிக்கப்படுமே தவிர, மக்களின் அபிலாஷைகள் பூர்த்தியடைய மாட்டாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது பற்றிய விடயத்தை தாம் ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி, ஓர் அரசியல் கட்சியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை வைத்துக்கொண்டு தேசிய அரசாங்கத்தை அமைப்பது எவ்வளவு தூரம் பண்பாடானதென்பதைச் சிந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.  அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் அமைச்சர்களுக்கான வசதிகளை அதிகரிப்பதும் மட்டுமே அதன் நோக்கமாகும் எனத் தாம் எண்ணுவதாகவும், தேசிய அரசாங்கம் என்ற கருத்து ஊடகங்களின் வாயிலாக தாம் அறிந்த வகையில் இருக்கும் என்றால் தாம் அதற்கு முற்றிலும் எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

காலிமுகத்திடலில் நேற்று நடைபெற்ற தேசிய தின விழாவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். 

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் ​சொலிஹ் சிறப்பதிதியாகக் கலந்துகொண்ட இத் தேசிய தின விழாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் கருஜயசூரிய,  உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன உட்பட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,  

இன்று தனிக்கட்சி அரசாங்கம் ஒன்றின் மூலம் அமைச்சரவையின் எண்ணிக்கை 25ஆக வரையறுக்கப்படுமானால் அது மக்களின் பிரார்த்தனை என்றே நான் நம்புகிறேன்.

நாடு உங்களுக்கு செய்ய வேண்டிய பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் பற்றி கேள்வி கேட்பதற்கு முன்பு உங்களால் நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகள், பொறுப்புக்கள் பற்றிய உறுதிப்பாட்டை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றே பெரும்பாலானவர்கள் கேட்கிறார்கள். எனினும் நாட்டுக்காக செய்ய வேண்டிய பொறுப்புகள் மற்றும் கடமைகளை செய்வது அவசியமானது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

2015ஆம் ஆண்டு பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை நிறுவியதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அதனூடாக நாம் நாட்டுக்கு பாரிய சேவையை ஆற்றினோம். ஆனாலும் செய்திருக்க வேண்டிய பல விடயங்களை நாம் கண்டுகொள்ளாமல் புறக்கணித்துள்ளோம். 2015ஆம் ஆண்டு முதல் புதியதோர் அபிவிருத்தியுடன்கூடிய தூய அரசியல் பயணத்தை மேற்கொள்ளவே நான் முயற்சி செய்தேன். அனைத்து சந்தர்ப்பங்களிலும் மக்கள் அரசாங்கத்தை மாற்றுவதன் மூலமாக அவர்களது கடமையை ஆற்றியுள்ளனர். ஆனால், ஆட்சியை கைப்பற்றும் அனைத்து அரசாங்கங்களும் மக்களின் எண்ணங்களை சிதைத்துள்ளன. மக்களின் இறையாண்மையின் அதி உன்னத இடமாகக் கருதப்படும் பாராளுமன்றம் இன்று வலு இழந்திருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. பாராளுமன்ற அவையில் காவல்துறை அதிகாரிகளுக்கு மிளகாய் தூளால் தாக்குவதற்கும், மறைத்து வைக்கப்பட்ட கத்திகளை காட்டி அச்சுறுத்துவதற்கும், மக்களின் வரிப் பணத்தால் இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் வளங்களை அழிப்பதற்கும் முயலும் நிலை எத்தனை கொடூரமானது. இன்று சமூகத்தின் பண்பற்ற நிலையை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே பாராளுமன்றத்தை எண்ணுகின்றனர்.  

அரச தலைவர் என்ற பதவி ஒருவருக்கு கிடைப்பது குடிமக்களின் வறுமையை நீக்கி, ஆதரவற்றோர், விதவைகள், நிர்க்கதியானவர்கள், அங்கவீனமுற்றோர், குழந்தைகள், பெண்கள், மீனவர்கள், தொழிலாளர்கள் ஆகிய அனைத்து பிரிவு மக்களையும் அழுத்தங்களிலிருந்து காப்பாற்றி சமூக, பொருளாதார மற்றும் சிந்தனை சார்ந்த விடுதலையை பெற்றுக்கொடுப்பதற்கேயாகும். 

பல தசாப்தங்களாக இனமோதலுக்கு தீர்வு காண்பதற்காகவே அனைத்து அரசாங்கங்களும் காலத்தை செலவிட்டன. அதற்கான முக்கியத்துவத்தை வழங்கின, தீர்வுகளை தேடின, அதனால் நாட்டின் பொருளாதார தீர்வுக்கான நடவடிக்கைகள் பின்போடப்பட்டன. அனைவரும் இனமோதலுக்கு முக்கியத்துவமளித்தாலும் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவமளித்து கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு எவரும் முயற்சி செய்யவில்லை. கடன் சுமை, வேலையின்மை ஆகிய இரண்டு பிரச்சினைகளுக்கும் இன்று தீர்வின்றி தவிக்கின்றோம்.

உலக நாடுகளில் 6,000மொழிகளுக்கும் மேல் பேசப்பட்டு வருகின்றதென்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் எமது நாட்டில் மூன்றே மூன்று மொழிகள் மட்டுமே பேசப்பட்டு வருகின்றன. நாம் அனைவரும் ஒரே தேசத்தில் வாழும் மனிதர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.  

வடக்கு மக்கள் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னர் பெற்ற சுதந்திரத்தில் கடந்த நான்கு ஆண்டுகளே மிகவும் இயல்பாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பது எனது நம்பிக்கையாகும். தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை கேலிப்பொருளாக ஆக்கிவிடாமல் அவற்றின் பாரதூரமான நிலையை நாம் கண்டறிய வேண்டும். செந்தணல் மேல் இருக்கும் சாம்பலில் நாம் நின்றுகொண்டிருப்பதை மறந்துவிடக் கூடாது.  

நாம் மாகாண சபை முறைமையை நிறுவி 30ஆண்டுகளுக்கு மேலாகின்றன. வருடாந்த வரவு செலவு திட்டத்தின் மூலமாக மாகாண சபைகளுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியில் அபிவிருத்திக்கும் முதலீட்டுக்கும் 15சதவீதமே ஒதுக்கப்பட்டிருக்கின்றது. மீண்டுவரும் செலவு, பராமரிப்புக்கான செலவு 85வீதமாகும்.

இந்த நிலையை நாம் மாற்றி அமைக்க வேண்டும். சுமார் ஒன்றரை வருட காலமாக மாகாண சபை தேர்தலை நடத்தாமல் இருப்பது ஜனநாயகத்திற்கான சவாலாகவே நான் கருதுகின்றேன். இவை தொடர்பில் பேசுவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் இன்று முன்வருவதில்லை.   நாட்டினுள் ஊழலையும் அராஜகத்தையும் வீண்விரயத்தையும் இல்லாதொழிப்பதற்கு முக்கியத்துவமளிக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். போதைப்பொருள் கடத்தல் பாதாள உலகத்தினரின் நடவடிக்கைகள் உள்ளிட்ட நாட்டை ஆட்டிப்படைக்கும் கறுப்புப் பொருளாதாரத்திற்கு உயிரூட்டும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் நாம் தோற்கடிக்க வேண்டும்.

நாட்டின் எதிர்காலத்தின் உரிமையாளர்களான இளைஞர் சமுதாயத்தை புதிய உற்பத்திகளுக்கு ஊக்குவிப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கு தொழிநுட்பம் கல்வி, மூலதனம், உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதை துரிதப்படுத்த வேண்டும். புத்திஜீவிகள் நிறைந்ததொரு சமுதாயமாக மாற்றுவதற்கு கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். 2016ஆம் ஆண்டு நான் தெரிவித்த கலாசார மாணவன் மற்றும் தொழிநுட்ப மாணவனை பாதுகாப்பதும் ஊக்குவிப்பதும் நம் அனைவரினதும் கடமையாகும்.

ஒரு நாளும் பிளவுபடாத ஒரே கொடியின் கீழ் இயங்கும் ஒரே நாடாக நாம் அனைவரும் சமமாக வாழக்கூடிய பின்புலத்தை உருவாக்க வேண்டும்.

நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். முப்பது வருட கால யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவத்தினரையும், அங்கவீனமுற்றோரையும் அவர்களது குடும்பத்தினரையும், அனைத்து இராணுவ வீரர்களையும் நான் மீண்டும் மீண்டும் நினைவுகூருகின்றேன்.

ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றிய இரண்டு வீரர்கள் கடந்த வாரம் கடமையில் இருந்தபோது உயிர்நீத்தனர். அவர்களது மறைவுக்காக எனது ஆழ்ந்த வருத்தத்தையும் இந்தவேளையில் தெரிவித்துக்கொள்வதாகவும் ஜனாதிபதி  குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

21ஆம் நூற்றாண்டின் நவீன பொருளாதார கொள்கையாக அமைந்துள்ள அறிவியல் சார்ந்த பொருளாதாரம், புதிய உற்பத்திகள், பசுமை பொருளாதாரம், கடல்சார்ந்த பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற புதிய பொருளாதார எண்ணக்கருக்களை ஐக்கிய நாடுகளின் பேண்தகு அபிவிருத்தி இலக்குகளுடன் இணைத்து நடைமுறைப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலகில் பல பொருளாதார நிபுணர்கள் 21ஆம் நூற்றாண்டிற்கு ஆசியாவின் நூற்றாண்டு என மறுபெயர் சூட்டியுள்ளனர். அதற்கமைய ஆசிய வலயத்தின் பொருளாதார அபிவிருத்தி மிக வேகமாக இடம்பெற்று வருவதுடன், இந்த காலகட்டத்தின் சாதகமான நிலையை பயன்படுத்துவதன் ஊடாக எதிர்கால ஆசியாவின் மனிதவள தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேர்ச்சிபெற்ற தொழிலாளர்களையும் தொழில் வல்லுனர்களையும் வழங்கும் பிரதான நாடாக இலங்கையை மாற்றியமைப்பதற்கு நாம் அனைவரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

(லோரன்ஸ் செல்வநாயகம், ஸாதிக் ஷிஹான்)  

Tue, 02/05/2019 - 13:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை