சம்பளப் பிரச்சினைக்கு உடனடி தற்காலிக தீர்வு

நாள் சம்பளத்துடன் ஒரு தொகைப் பணத்தை பங்களிப்பு செய்ய அரசு இணக்கம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடி தற்காலிக தீர்வாக அவர்களது நாள் சம்பளத்துடன் ஒரு தொகை பங்களிப்பை செய்வதற்கு அரசாங்கத் தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் இத் தொகை அதிகரிப்பு அறிவிக்கப்படலாம் எனவும் மேலதிக விபரங்களை பிரதமரிடம்

கலந்துரையாடுவது என்றும் நேற்றைய பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் ஒரு வருட காலத்திற்குள் பெருந்தோட்டத்துறை முகாமை முறையை மறுசீரமைப்பதற்கும் இந்தப் பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் அரசாங்கத்திற்குமிடையிலான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சில் நேற்று இந்தப் பேச்சவார்த்தை நடைபெற்றது. தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர் அமைச்சர் மனோ கணேசன், பிரதித் தலைவர்கள் அமைச்சர் பழனி திகாம்பரம், அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம். திலகராஜ், அரவிந்த் குமார் ஆகியோரும் அரசாங்கத் தரப்பில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, தொழில் அமைச்சர் ரவீந்தர சமரவீர ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னைய கோரிக்கையின்படி தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கத்தின் தலையீடு அவசியம் என்பதை பேச்சுவார்த்தையின்போது அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தற்காலிக தீர்வாக அரசாங்கத் தரப்பில் நாள்சம்பளத்துக்கு ஒரு தொகை பங்களிப்பை செய்வதற்கும் ஒரு வருட காலத்திற்குள் பெருந்தோட்டத்துறை முகாமை முறையை மறுசீரமைப்பதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வரவு - செலவுத் திட்டத்தில் மேற்படி தொகை அதிகரிப்பு அறிவிக்கப்படலாம் எனவும் மேலதிக விபரங்களை பிரதமரிடம்

கலந்துரையாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wed, 02/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை