உலகில் எந்தவோர் அரச தலைவரும் என்னைப்போல் அதிகாரத்தை தானமாக வழங்கமாட்டார்கள்

*அரசியலமைப்புச் சபையில் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை அதிகரித்தது சரியல்ல

* மாகாண சபை முறைமையில் எதிர்பார்த்த நோக்கம் நிறைவேறவில்லை

அண்மையில் நான் பாராளுமன்றத்தில் சுயாதீன ஆணைக்குழுக்கள் பற்றி வெளியிட்ட கருத்து தொடர்பில் இன்று இந்த பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு சபை பற்றி நடத்தப்பட்ட கலந்துரையாடலிலும் அதற்கு அப்பால் வெளியே பல்வேறு வைபவங்கள், செய்தியாளர் மாநாடுகள் மற்றும் அரசியல் மேடைகளிலும் கௌரவ பிரதம மந்திரி அவர்களும் கௌரவ சபாநாயகர் அவர்களும் பல அறிக்கைகளை வெளியிட்டிருந்தீர்கள்.

இன்று இந்த விவாதம் ஆரம்பமானது முதல் அதில் பங்கேற்ற ஆளுந்தரப்பினரும் சில எதிர்க்கட்சியினரும் இப்பிரச்சினை தொடர்பில் நான் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை பற்றி மிகவும் தவறான விளக்கங்களை முன்வைத்தவாறு எனது நிலைப்பாட்டை மிகக் கடுமையாக விமர்சித்ததாக எனக்கு அறியக் கிடைத்தது. இருப்பினும் கௌரவ சபாநாயகரின் அனுமதியுடன் இன்று இந்த சபைக்கு நான் வருகை தந்ததன் நோக்கம் அவர்களின் அந்த கருத்துக்களுக்கு பதிலளிப்பதற்காக அல்ல என்பதை முதலில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அத்தோடு எனது நிலைப்பாடு தொடர்பில் இதுவரை ஏனையோரால் முன்வைக்கப்பட்டிருக்கும் கருத்துக்களையும் விமர்சனங்களையும் நான் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றேன் என்பதையும் இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

பிரதமர் அவர்களினதும் ஆளுந்தரப்பு மற்றும் எதிர்தரப்பு அங்கத்தவர்களினதும் கருத்துக்களில் ஏற்கனவே உயர் நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கின்ற நீதியரசர்களின் நியமனங்கள் தொடர்பில் நான் எனது எதிர்ப்பை தெரிவிக்கின்றேன். அல்லது அந்நியமனங்கள் பற்றி விமர்சிக்கின்றேன் என்ற கருத்தையே அவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். ஆயினும் உச்ச நீதிமன்றத்திற்கோ மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கோ நியமனங்களைப் பெற்றிருக்கும் நீதியரசர்கள் பற்றி நான் எந்தவித விமர்சனத்தையோ குற்றச்சாட்டையோ முன்வைக்கவில்லை என்பதை மிகத் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அத்தோடு அந்த நியமனங்கள் தொடர்பில் நான் எந்தவித எதிர்ப்பையும் வெளிப்படுத்தவும் இல்லை.

ஆயினும் இப்பிரச்சினையை திரிபுபடுத்தி நீதித்துறைக்கும் நாட்டுக்கும் என்னைப் பற்றி மிகத் தவறான ஒரு தோற்றத்தை உருவாக்க சிலர் முயற்சி எடுக்கின்றார்கள் என்பதை நான் உணர்கின்றேன். கௌரவ சபாநாயகரும் ஏனைய சபை அங்கத்தவர்களும் நான் இந்த உயரிய சபையின் அங்கத்தவர் அல்ல என்பதை அறிவீர்கள். நான் இன்று இங்கு உரையாற்றுவது அரசியல் யாப்பில் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்திற்கு வருகை தருவதற்கும் உரையாற்றுவதற்கும் வழங்கப்பட்டிருக்கும் விதிமுறைகளுக்கு அமையவே என்பதை விசேடமாக நான் இங்கு குறிப்பிட வேண்டும்.

2015 ஜனவரி 08 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில், நாட்டு மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியினையே 19வது சீர்திருத்தம் மூலம் நாம் நிறைவேற்றினோம். நான் ஜனாதிபதி பதவியை ஏற்ற மறுகணமே ரணில் விக்கிரமசிங்க அவர்களும் என் முன்னால் பிரதம மந்திரி பதவியில் சத்திய பிரமாணம் செய்து கொண்டார் என்பது உங்களுக்கும் மதிப்பிற்குரிய இச்சபையின் அனைவருக்கும் ஞாபகமிருக்கும். எமக்கிடையே ஏற்படுத்திக் கொண்டிருந்த இணக்கப்பாட்டுக்கும் உடன்பாட்டுக்கும் அமைவாகவே அப்படி செய்து கொள்ளப்பட்டது.

அத்தோடு அந்த இணக்கப்பாட்டுக்கு அமைய செயற்படுவதற்காக எம்மால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளுக்கு அமைவாக கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட போது எனது ஞாபகத்திற்கு ஏற்ப இச்சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் 41 அல்லது 47 பாராளுமன்ற உறுப்பினர்களே இருந்தார்கள். அந்த எண்ணிக்கை சரியாக இப்போது என் ஞாபகத்தில் இல்லை. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 142 பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சமயம் இருந்தார்கள். அதிலும் 127 பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாகவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாகவே இருந்தார்கள். ஏனையோர் இடதுசாரி முற்போக்கு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கத்துவ கட்சிகளின் உறுப்பினர்களாகும்.

அன்று நான் ஜனாதிபதி பதவியை ஏற்று சுமார் மூன்று வாரங்களுக்குள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை என்னிடம் ஒப்படைத்ததன் பின்னர் பாராளுமன்றத்தினுள் ஆளுங்கட்சி எதிர்கட்சி என்ற வேற்றுமையின்றி புதிய அரசாங்கம் என்ற வகையில் எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் ஜனாதிபதி என்ற வகையில் எனது பணிகளை முன்னெடுப்பதற்கும் இந்த உயரிய அவையின் அறுதிப் பெரும்பான்மையினர் எமக்கு கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுத்தார்கள். அதன்போது ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இவ்வனைத்து தரப்புகளும் அந்த குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் மிகுந்த ஒத்துழைப்புடனும் நட்புடனும் அரசிற்கு ஒத்துழைப்பை வழங்கின.

இந்த ஒத்துழைப்பின் காரணமாகவே எம்மால் 19வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை நிறைவேற்ற முடிந்தது. 225 உறுப்பினர்களில் 215 உறுப்பினர்கள் அதற்கு சார்பாக அவர்களது வாக்குகளை அளித்திருந்தார்கள் என்பதை கௌரவ சபாநாயகர் அவர்களும் அறிவீர்கள். இன்று எதிர்கட்சியில் இருக்கும் பெருமளவான பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இந்த மதிப்பிற்குரிய அவையை பிரதிநிதித்துவப்படுத்திய அனைவரும் அவ்வாக்கெடுப்பில் அவர்களது வாக்குகளை இதற்காக பெற்றுக் கொடுத்தார்கள். அவ்வாறு வாக்குகளைப் பெற்றுக்கொடுத்து உருவாக்கிய 19ஆவது சீர்திருத்தமானது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மிகத் தெளிவான விடயமாக, வாக்குறுதியாக, உடன்படிக்கையாகவே இருந்தது.

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27, 28 ஆகிய இரண்டு தினங்களிலும் முழு நாளும் நான் பாராளுமன்றத்திலேயே இருந்தேன். அப்படி இருந்ததற்கு காரணம் கௌரவ மங்கள சமரவீர அமைச்சர் அவர்கள் இதற்கு முன்னும் குறிப்பிட்டதைப் போன்று என்னால் பெற்றெடுக்கப்பட்ட 19வது சீர்திருத்தம் எனும் குழந்தை பேறிற்காகவே ஆகும். அவ்வாறு நான் பெற்றெடுத்தது ஒழுக்கமான குழந்தையே ஆகும். அத்தகையதோர் ஒழுக்கமான குழந்தையை பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலேயே நான் பெற்றெடுத்தேன். இவ்வுலகில் பிறக்கின்ற குழந்தைகளை ஒழுக்கமான குழந்தைகள் என்றும் சிலவேளைகளில் இன்னும் வேறுவிதமான குழந்தைகள் என்றும் கூறப்படுவதுண்டு. நாம் பெற்றெடுத்த குழந்தை நல்வழியில் பிறந்த ஒரு ஒழுக்கமான குழந்தை.

இந்த நாட்டின் சிறந்ததோர் அரச நிர்வாகத்திற்காகவே அக்குழந்தையை நாம் பெற்றெடுத்தோம். அவ்வாறு நாம் பெற்றெடுத்த 19வது சீர்திருத்தம் என்னும் குழந்தையை பெற 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதி மாலை இந்த அரசாங்கத்தின் சார்பில் கைகொடுத்து உதவியவர் என்ற வகையில், இப்போது இந்த சபையில் காணப்படாவிட்டாலும் விஜயதாச ராஜபக்ஷ, ஓர் அமைச்சர் என்ற வகையில் அன்று இந்த அவையில் எதிர்கட்சியிலிருந்து எழுந்த அத்தனை வாதப் பிரதிவாதங்களுக்கும் முகங்கொடுத்தமை தொடர்பில் அவருக்கு நான் நன்றி கூற விரும்புகின்றேன்.

அதன் பின்னரும் அரசியலமைப்பு சபையில் அரசியல்வாதிகள் எத்தனை பேர்? சிவில் அமைப்புக்கள் எத்தனை? தொழிற்சார் நிபுணர்கள் எத்தனை பேர்? தொடர்பில் மிகக் கடுமையான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. எவ்வாறாயினும் ஓர் ஒழுக்கமான குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற உன்னதமான குறிக்கோளுடன் முன்னெடுக்கப்பட்ட அவ்விடயங்கள் மிகத் தெளிவாக சிறந்த அரச நிர்வாகத்தில் இருக்க வேண்டிய அம்சங்களுக்கு மாறாக இன்று இந்த அரசியலமைப்பு சபை ஊடகவியலாளர் குசல் பெரேரா கூறியிருப்பதைப் போலவே 19ஆவது சீர்திருத்தம் எனும் குழந்தை பிறப்பிலேயே முடக்கமான அல்லது அங்கவீனமான குழந்தையாக்கப்பட்டிருக்கின்றது.

குசல் பெரேரா சுதந்திரமான கருத்தைக் கொண்ட ஊடகவியலாளர் என நீங்கள் அனைவருமே குறிப்பாக இன்று ஆளுங்கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்கின்றீர்கள் என நான் நினைக்கின்றேன். அவரின் கருத்துக்களை நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் நான் ஏற்றுக்கொள்கிறேன். 19ஆவது திருத்தச் சட்டம் பிறக்கும்போதே ஊனமாக பிறந்தது என்று நான் கூறவில்லை. ஓர் ஊடகவியலாளர் கூறுகின்றார். அதை அவர் எவ்வாறு தெளிவுபடுத்துகிறார் என்றால், அரசியலமைப்பு சபையில் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதும் நல்லாட்சி எண்ணக்கருவிற்கு உள்ளடங்க வேண்டிய தொழில் நிபுணர்கள், அறிஞர்கள், சிவில் சமூக பிரதிநிதிகளை விட அரசியல்வாதிகளின் எண்ணிக்கை அதில் அதிகமாக இருப்பதால் அரசியலமைப்பு சபையினூடாக எதிர்பார்த்த விடயங்கள் நிறைவேறாமல் அச்சபை வேறொரு வழியில் செல்வதாக அந்த கட்டுரையில் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலைமையை கருத்திற்கொண்டு நான் ஒன்றை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். 19ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக வரையறையற்ற நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின் அதிகாரங்கள் பாராளுமன்றத்திற்கும் அரசியலமைப்பு சபைக்கும் அதனூடாக சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இங்கிருக்கும் அனைத்து மதத்தினரும் தானம் வழங்குவதற்கு மிகவும் விருப்பம் கொண்டவர்கள். எமது நாட்டு கலாசாரத்தில் சிங்களவர்களோ இந்துக்களோ இஸ்லாமியர்களோ கிறிஸ்தவர்களோ உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாதவாறு தானங்களை வழங்குகின்றனர். இலங்கையில் போன்று வேறு எந்த நாட்டிலும் தானம் வழங்குகின்ற நிகழ்வுகள் இல்லை. பௌத்த வரலாற்றின் ஆரம்ப காலம் முதலே நாங்கள் தானங்களை வழங்குகிறோம். அன்னதானம், ஆடைகள், சொத்துக்கள் ஆகியவற்றை தர்மம் செய்வது மாத்திரமன்றி, 30 ஆண்டுகால யுத்தத்திற்காக எமது இராணுவத்தினர் உயிரையே தானமாக வழங்கியுள்ளனர். எல்ரீரீஈ இயக்கத்தின் யுத்த தாங்கிகள் வரும்போது அவர்கள் அதன் மீது பாய்ந்து அவர்களது உயிரைத் தியாகம் செய்தார்கள். அதேபோன்று இரத்தத்தை தானமாக வழங்குகிறார்கள், நானும் அன்னதானம் வழங்கியுள்ளேன்.

ஆடைகளையும் தர்மம் செய்துள்ளேன், இளமை பருவத்தில் இரத்த தானம் செய்துள்ளேன். உலகில் சில நாடுகளில் உடலுறுப்புகளையும் தானமாக வழங்குகிறார்கள். அதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், அதிகாரத்தைத் தானமாக வழங்கியவர்கள் சில பேரே உள்ளனர். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான் வெற்றி பெற்றதன் பின்னர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கமைய எனது அதிகாரத்தை தானமாக வழங்கியுள்ளேன். உலகில் எத்தனை பேர் அவ்வாறான செயலை செய்திருக்கிறார்கள் என்பதை நான் அறியேன். நான் முன்னர் குறிப்பிட்டது போல் உணவு, உடைகள், இயன்றளவு பணம், இரத்தம் ஆகியவற்றை தானமாக வழங்கியதோடு, அதிகாரத்தை பெற்றவுடன் உலகில் எந்த தலைவரும் முன்வராத வகையில் என்னிடம் இருந்த அதிகாரத்தை நான் தானமாக வழங்கினேன். உன்னத எண்ணத்துடன் அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் கொள்கைகைளையும் நிறைவேற்றிக் கொள்வதற்காகவே நான் அவ்வாறு எனது பங்களிப்பை வழங்கினேன்.

19ஆவது திருத்தச்சட்டம் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருப்பதை வருத்தத்துடனேயே தெரிவித்துக் கொள்கிறேன். நான் இவ்வாறு தெரிவிப்பதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. மக்களுக்கு நன்மையை பெற்றுக்கொடுக்கும் உன்னத நோக்கத்துடன், 19ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றினோம். அரசியலமைப்பு சபையை நிறுவினோம். சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தோம். சுயாதீன ஆணைக்குழுக்களினதும் அரசியலமைப்பு சபையினதும் பொறுப்புகள் மற்றும் முன்னோடி நடவடிக்கை தொடர்பில் 19ஆவது திருத்தச் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 19ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படும் எதையுமே நாம் முன்னெடுக்கவில்லை.

13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்ட மாகாண சபை சட்டத்தின் கீழ் மாகாண சபைகள் நிறுவப்பட்டு தற்போது 30 வருடங்களுக்கும் மேலாகின்றது. ஆனால் மாகாண சபை முறைமையின் வெற்றி, தோல்வி பற்றியோ, அவற்றை வலுவூட்டும் முறைமைகள் தொடர்பிலோ 30 வருட காலமாக எந்தவொரு அரசாங்கமும் மீளாய்வு செய்யவில்லை. அதனால் மாகாண சபைகளில் நாம் எதிர்பார்த்த நோக்கங்கள் வெற்றியடைந்துள்ளதா? தோல்வியடைந்துள்ளதா? என்பதை கணக்கிட்டு கூறமுடியாது.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் சுயாதீன ஆணைக்குழுக்கள் பற்றிய பிரச்சினைகள் தொடர்பாக நான் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் பலர் தவறான முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர். நான் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு எதிராக பேசவில்லை. அரசியலமைப்பு சபையின் காலவரையறை போன்று சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் காலவரையறை உண்டா? அது தொடர்பிலான விடயங்கள் என்ன? கொள்கைகள் என்ன? வழிகாட்டல்கள் என்ன? என்பதையே நான் கேட்டேன். அவ்வகையான எந்த விடயமும் சுயாதீன ஆணைக்குழுக்களிடம் இல்லை. நான் அன்று கூறியதையே இன்றும் கூறுகிறேன். மனித உரிமை ஆணைக்குழு 21 மில்லியன் நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்கின்றதா? அல்லது குற்றவாளிகளினதும் பாதாள உலக கோஷ்டிகளினதும் மனித உரிமைகளைப் பாதுகாக்கின்றதா? என்றே நான் அவரிடம் கேட்கிறேன். மனித உரிமைகள் தொடர்பில் பெருமை பேசும் உலகின் மாபெரும் நாடுகளின் தலைவர்கள் தீவிரவாதிகளையோ போதைப்பொருள் கடத்தற்காரர்களையோ பாதாள உலக கோஷ்டியினரையோ கைது செய்ததன் பின்னர் மனித உரிமைகளுக்கு அனுகூலமாகவா செயற்படுகின்றார்கள். அனைத்து மனித உரிமைகளையும் எம்மிடம் தான் திணிக்கிறார்கள்.

நீதிபதிகளை நியமிப்பது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவரும் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் என்னை கடுமையாக விமர்சித்திருந்தனர். நான் நீதிபதிகளை நியமிப்பது தொடர்பில் குறை கூறியுள்ளேன் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைதான் நான் முன்பும் தெரிவித்தேன்.

நான் கூறியது நியமிக்கப்பட்டவர்களையல்ல. எனது கேள்வி அரசியலமைப்பு சபையினால் நிராகரிக்கப்படும் சிபாரிசுகளுக்கு என்ன நடக்கும்? அதற்கு பொறுப்புக் கூறுகின்றவர் யார்? என்பதே. .. அச்சபையினால் இதுவரை 14 நீதியரசர்களின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலரின் பெயர்களை நான் மூன்று முறை அரசியலமைப்பு சபைக்கு அனுப்பி வைத்திருக்கின்றேன். எதனால் அவ்வாறு அப்படி அனுப்பி வைக்கப்படுகின்றது? காரணம் நீதியரசர்களால் அரசியல் யாப்பு சபைக்கு முன்னாள் ஆஜராக முடியாது. பிரதம நீதியரசரை சந்திக்கவும் முடியாது.

ஆகையால் அவர்களால் இலகுவாக பிடித்துக் கொள்ளக்கூடியவன் நான் ஒருவன் மாத்திரமே. என்னை வீதியில் வைத்தாவது பிடித்துக்கொள்ள முடியும் அதனாலேயே அவர்கள் தமது குறைகளைக் கூறக்கூடிய இடத்தை நாடி வருகிறார்கள். அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றார்கள். நீங்களே எம்மை கவனத்தில் கொள்ளவில்லை என்றும் கூறுகின்றார்கள்.

அதாவது நானே அவர்களை வெட்டுகின்றேன் என்ற எண்ணம் முதலில் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. ஆனால் இப்போது அவர்களுக்கு அந்த எண்ணம் இல்லை. ஆகையால் மிகத் தெளிவாகவே நீதியரசர்களின் பெயர் அரசியலமைப்பு சபையினால் நிராகரிக்கப்படும் பட்சத்தில் அப்பதவியை வகிப்பவருக்கு தமது சேவைக்காலத்திற்கான பதவி உயர்வு தமக்கு அரசியலமைப்பு சபையினாலோ வேறொரு நிறுவனத்தினாலோ எதனால் சிபாரிசு செய்யப்படவில்லை என்ற காரணத்தை அறிந்து கொள்வதற்கான உரிமை இருக்கின்றது.கௌரவ சபாநாயகர் அவர்களே,

நீதித்துறையும் காவல் துறையும் அரச துறையும் சமூகமும் அரசியல்மயமானதாக அன்று நீங்கள் தெரிவித்தது போன்று அரசியலமைப்பு சபை அரசியல் மயமாகியிருப்பதாக நீதிபதிகள், கல்விமான்கள், புத்திஜீவிகள், பக்கசார்பற்ற நடுநிலை கொண்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வேலியே பயிரை மேய்ந்தால் யாரிடம் முறையிடுவது என்ற கதை உள்ளது.

அண்மையில் நீதிபதிகளை நியமிப்பது தொடர்பில் நீங்கள் எனக்கொரு கடிதம் அனுப்பி வைத்திருந்தீர்கள். 2019 ஜனவரி 02 ஆம் திகதி நீங்கள் அனுப்பிய அந்த கடிதத்தில் ஒரு நபரை தேர்ந்தெடுக்கும் போது அவரின் சேவை மூப்பை மாத்திரம் ஒருபோதும் கவனத்திற்கொள்ள மாட்டோம். சட்டம் மற்றும் நீதிமன்ற சேவையில் அவர் பெற்றிருக்கும் திறமை, நிபுணத்துவம், வினைத்திறன், சுயாதீனத்தன்மை மற்றும் நேர்மை போன்றவற்றையே நாம் கருத்திற்கொள்வோம்.

மேலும் இலஞ்சம் வாங்கியவர்கள், திறமையற்றவர்கள், இலஞ்ச குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர்கள், சுயாதீனமாக செயற்படவில்லை என்று ஆதாரபூர்வமாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஆகியவர்கள் சபையினால் கடந்த காலங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளனர். நிராகரிக்கப்பட்டவர்களை தான் நீங்கள் இங்கு குறிப்பிட்டுள்ளீர்கள். இங்கு பிரச்சினை என்று நான் கருதுவது என்னவென்றால் இது உங்களதும் எனதும் பொறுப்பு மாத்திரமல்ல, பிரதம நீதியரசின் பொறுப்பும் இதில் உள்ளடங்கியுள்ளது. நீதிபதி ஒருவரை நியமிப்பதற்கு பிரதம நீதியரசருக்கும் கடமை உள்ளது. நான் அறிந்த வகையில் நீதிபதி ஒருவர் பதவி உயர்வுக்கு தகுதியானவர் இல்லையென்றால் அவர் அந்த பதவி உயர்வுக்கு தகுதியற்றவர் என்று அவருக்கே அறிவியுங்கள்.

ஒழுக்காற்று விசாரணையா, இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பிலான பிரச்சினையா, கடமையாற்றுவதில் தவறுகளா, இல்லையென்றால் வேறேதும் விடயமா என்பதை அவருக்கே தெரிவிக்க வேண்டும். இப்போது 14 பேர் ஏன் என் பின்னால் வருகிறார்கள்? அவர்களில் அரைவாசிக்கும் மேலானவர்கள் தற்போது ஓய்வு பெற்றுள்ளார்கள். அவர்கள் பதவி உயர்வை பெற்றிருந்தால் 65 வயது வரை கடமையாற்றியிருக்கலாம் என்றும் 60 வயதில் அவர்களுக்கு சேவையிலிருந்து ஓய்வுபெற நேர்ந்ததாகவும் கூறுகிறார்கள். அவர்களுக்கு பதவியுயர்வு வழங்கியிருந்தால் 65 வயது வரை கடமையாற்றிருக்கலாம் என்றும் ஏன் பதவி உயர்வு வழங்கவில்லை என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் அவர்கள் என்ன குற்றஞ்செய்தார்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள். அப்படியென்றால் இது தொடர்பாக ஏன் இன்னும் பதிலளிக்கவில்லை.

அத்துடன் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 02 ஆம் திகதி நீங்கள் அனுப்பிய கடிதத்தில் மற்றுமொரு விடயத்தை குறிப்பிட்டுள்ளீர்கள். தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கும் போது நியாயமானதும் வெளிப்படையானதுமான நடைமுறைகளைப் பின்பற்றி சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அச்சுறுத்தல்களின்றி முடிவுகளை எடுப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாகவும் அனைத்து கருத்துக்களையும் ஆராய்ந்து பக்கசார்பற்ற இறுதி முடிவொன்றுக்கு வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தீர்கள். நியாயமானதும் வெளிப்படையானதுமான பொறிமுறையாக இருந்தால் இந்த பதவிகளுக்காக பெயர்களைத் தெரிவுசெய்து உங்களிடம் அனுப்பிவைக்கும் ஜனாதிபதிக்கு நிராகரிப்பிற்கான காரணத்தை தெரிந்துகொள்ள முடியாதா? நீங்களோ பிரதம நீதியரசரோ எனக்கு அவ்வாறான எந்த விளக்கத்தையும் இதுவரை அனுப்பி வைக்கவில்லை. நிராகரிக்கப்பட்ட 14 பேரும் இந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றே தெரிவிக்கின்றார்கள்.

19ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதன் ஊடாக சட்டத்தின் ஆதிக்கத்தை வலுப்படுத்தி அரசியலமைப்பிற்கிணங்க அரச நிர்வாகத்தை மேற்கொள்ளவே எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக அந்த திருத்தத்துடன், இணைக்கப்பட்ட முக்கியமான விடயம் என்னவென்றால் அரசியலமைப்பு சபையை நிறுவுவதாகும். 18ஆவது திருத்த சட்டத்தின் மூலம் அரசியலமைப்பு சபையை அரசியல் மயமாக்கி, அது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களுக்கு கீழ் கொண்டுவரப்பட்டிருப்பதாக 2015 தேர்தல் சமயத்தில் ஒரு கருத்து நிலவியது.

அது ஜனநாயக விரோத, வெளிப்படைத்தன்மையற்ற முடிவுகளை எடுப்பதற்கு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஒருவரை தூண்டும் செயலாக தொடர்ச்சியான விமர்சனங்களை முன்வைப்பதற்கான ஒரு முறைமையாக அமைந்திருந்தது. அவ்வாறானதொரு சூழ்நிலையில் நாம் அளித்த மிகவும் முக்கியமான அரசியல் வாக்குறுதியாகவே அரசியல் தீர்மானம் ஒன்றின் ஊடாக வெளிப்படைத்தன்மை மிக்க ஜனநாயக முறைமையொன்றை அறிமுகம் செய்வதின் மூலம் மக்கள் நேய அரச நிர்வாக முறையொன்றை உருவாக்குவோம் என்று தெரிவித்திருந்தோம். 19வது திருத்த சட்டத்தின் மூலம் மேற்குறிப்பிட்ட விடயங்களை நிறைவேற்றிக்கொள்ளவே எண்ணியிருந்தோம்.

ஆனாலும் இந்த இலக்குகளை மூன்று வருடங்களுக்கு மேலான காலம் கடந்துள்ள போதிலும் நிறைவேற்ற முடிந்துள்ளதா என்ற பிரச்சினை சமூகத்தில் நிலவுகிறது. இந்த சபையை அமைத்து அது சரிவர இயங்குவதற்கான பின்புலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது ஜனாதிபதி என்ற வகையில் எனது பொறுப்பாக உள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன். அதிலுள்ள முக்கியத்துவத்தை புரிந்து கொண்டதால் அரசியலமைப்பின் 33வது சரத்தின் உபபிரிவு (இ) இல் 19வது திருத்தத்தை உள்ளடக்குவதற்கு நான் தலைமை ஏற்றதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அரசியல் அமைப்பு சபையின் தலைமைத்துவத்தை ஏற்பது நாட்டின் மூன்றாவது குடிமகனான நீங்கள் தான். அதில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட விசேட நபர்கள் இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். இவ்வாறான ஆளுமை பொருந்திய சபையொன்றின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதற்கோ தகாத யோசனைகளை முன்வைப்பதற்கோ அரசியல் அமைப்புக்கு விரோதமான எந்தவொரு நடவடிக்கைக்கும் கடந்த நான்கு ஆண்டுகளாக நான் முன்வரவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். ஜனநாயக விரோத அல்லது அரசியல் அமைப்புக்கு விரோதமான அச்சுறுத்தல்களை மேற்கொள்ளாமல் அரசியல் அமைப்பு சபையின் விருப்பத்திற்கு அமைய நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு 33 (இ) சரத்துக்கு அமைய நான் எனது கடமைகளை சரிவர புரிந்துகொண்டு நடந்துகொண்டேன்.

ஆனால் இன்று தோற்றுவிக்கப்பட்டிருக்கும் நிலைமை காரணமாக இனியும் மௌனமாக இருக்க முடியாது. அரசியலமைப்பு சபை அரசியலமைப்புக்கு அனுகூலமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. அதன் காரணமாக அரசியலமைப்பின் ஊடாக எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய 31(1) (இ) பிரிவின் கீழ் அரசியலமைப்பு சபையின் நடவடிக்கைகள் தொடர்பில் கண்டறிவதற்கான அதிகாரம் சட்டபூர்வமானது மாத்திரமல்ல பண்பாடான கடமையுமாகும்.

அரசியலமைப்பு சபையொன்று இயங்கும் போது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஒருவரின் அதிகாரங்களை மீறி செயற்படக் கூடாது. ஏனென்றால் அரசியலமைப்பின் 3வது மற்றும் 4வது சரத்துக்கள் மூலம் மக்களின் நிறைவேற்று அதிகாரம் தேர்தலின் ஊடாக நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது. முதன் முறையாக அரசியலமைப்பு சபையொன்றை நிறுவுவதற்கான யோசனை 17வது திருத்தச் சட்டம் முன்வைக்கப்பட்ட போது உயர் நீதிமன்றத்தில் அது தொடர்பிலான அரசியலமைப்பு அனுகூலங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அது என்னவென்றால் அரசியலமைப்பு சபையொன்றுக்கு ஜனாதிபதியின் அதிகாரங்களை மீறி செயற்பட முடியாது என்று கூறப்பட்டுள்ளது. அச்சபை இயங்கும் போது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியுடன் இணைந்தும் ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெளிவாக தெரிவித்துள்ளது.

இந்த சட்டக் கோட்பாடுகள் அன்றும் இன்றும் ஒரே மாதிரியாக செல்லுபடியாகும். அதை தற்போதைய நிலைமைகளுக்கும் பொருத்திக்கொள்ள முடியும். ஆனால் இன்று அரசியலமைப்பு சபை நடந்துகொண்டிருக்கும் முறையை காணும் போது அரசியலமைப்பு சபையை நிறுவியதன் மூலம் ஜனநாயகத்திற்கும் நல்லாட்சிக்கும் மதிப்பளிக்கும் சமூகம் எதிர்பார்த்த எந்தவொரு விடயமும் இடம்பெறவில்லை என்பது தெளிவாகிறது.

நான் சிறந்த உதாரணம் ஒன்றின் மூலம் இதை தெளிவுபடுத்துகிறேன். அரசியலமைப்பின் 41 (ஏ) (1) அமைய மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சபையினால் அதற்கு மூன்று மாதங்களுக்கு முன் இடம்பெற்ற விடயங்கள் பற்றிய அறிக்கையை எனக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

அந்தப் பதவிகளுக்கு நியமித்த நபர்கள் தொடர்பில் இன்று நாட்டில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. விசேடமாக பொலிஸ்மா அதிபர் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் அதி உயர் நீதிமன்றங்களான உச்ச நீதிமன்றத்திற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நீதியரசர்களை நியமிக்கும் போது இந்த விடயம் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் முக்கியத்துவம் பெறுவது 41 (இ) பிரிவாகும். அதற்கமைய உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் மற்றும் நீதியரசர்களை நியமிக்கும் போது சபையினால் நீதியரசரின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

19 திருத்தச் சட்டத்திற்கு அமைய இது கட்டாயமாக செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். ஜனநாயக அரச முறைமையினுள் அடிப்படை கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்கும் முகமாக இந்த விடயம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டது. நீதிபதிகளின் செயற்பாடுகள் நேர்மை, வினைத்திறன், தொழிலுடன் சம்பந்தப்பட்ட ஏனைய விடயங்கள் தொடர்பில் விசாரித்தல், முடிவுகளை மேற்கொள்ளுதல் தொடர்பிலான அதிகாரம் எனக்கோ, அரசியலமைப்பு சபைக்கோ அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்படவில்லை.

அதன் பொறுப்பு பிரதம நீதியரசருக்கும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கும் அல்லது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முறையான செயற்பாடுகளின் ஊடாக மட்டுமே அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இது தொடர்பில் எனக்கு இருந்த நுட்பமான புரிதலின் காரணமாக நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும் போது அவர்களின் சேவை மூப்பை கருத்திற் கொண்டே பதவி உயர்வுகளை வழங்குவதற்கு அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைகளை முன்வைத்தேன். ஆனால் எந்தவித காரணங்களையும் தெரிவிக்காமல் அரசியலமைப்பு சபையினால் இந்த பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான காரணம் என்ன? இதற்கான காரணத்தை கண்டறிவதற்கு அரசியலமைப்பு சபையினால் எனக்கு அனுப்பிவைத்த அறிக்கைகளை உன்னிப்பாக கவனித்தேன்.

ஆனால் அந்த அறிக்கைகளில் இந்த விடயம் பற்றி தெளிவாக குறிப்பிடப்படவில்லை. அது மாத்திரமன்றி இந்தப் பரிந்துரைகள் தொடர்பில் நீதியரசர் எதை தெரிவித்தார்? அவரின் பரிந்துரை என்ன? இந்த நீதிபதிகள் தொடர்பில் அவரது கருத்து என்ன? என்பது தொடர்பில் ஒரு வார்த்தையேனும் எனக்கு தெரிவிக்கப்படவில்லை.

அந்த அடிப்படையின் கீழ் எனது பரிந்துரைகளை நிராகரிப்பதற்கு அரசியலமைப்பு சபைக்கு எத்தகைய அதிகாரங்கள் இருக்கின்றது என்பது கேள்விக்குறியதாகும். அவ்வகையான அதிகாரங்களை கிரகித்துக் கொள்வதன் ஊடாக அரசியலமைப்பு சபை பிடிவாதமாக செயற்பட்டிருப்பது புலப்படுகின்றது. அது மாத்திரமல்ல, அரசியலமைப்பு சபையின் அதிகாரங்கள் தொடர்பிலான கோட்பாடுகளுக்கு எந்தவித மரியாதையும் அளிக்காமல் நீதிமன்றத்தின் சுயேட்சை தன்மைக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் செயற்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சபையின் செயற்பாடுகளை புரிந்துகொள்வதற்காக அவர்களால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கைகளை பரிசீலித்தேன். அந்த அறிக்கையில் எனது பரிந்துரையை நிராகரிப்பது தொடர்பிலான நீதியரசரின் நிலைப்பாடு என்னவென்பது தொடர்பில் ஒரு வார்த்தைக்கூட குறிப்பிடப்படவில்லை. இதனூடாக அரசியலமைப்பு சபையினால் நீதிமன்றத்தின் அதிகாரமும் மக்கள் எனக்கு வழங்கியிருக்கும் நிறைவேற்று அதிகாரமும் வேண்டுமென்றே அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. எனது நிலைப்பாட்டிற்கமைய இது பாரிய அரசியலமைப்பு மீறலாகும். இதற்கு என்ன காரணம்? கடந்த நான்கு ஆண்டுகளாக அரசியலமைப்பு சபை தனது நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கான சட்டங்களை உருவாக்கும் செயற்பாடுகளை சரிவர நிறைவேற்றாததே ஆகும். 41 (இ)6 மற்றும் (உ) ஆகிய சரத்துக்கள் மிக முக்கியமானவையாகும்.

விசேடமாக அது தொடர்பிலான அரசியலமைப்பின் சரத்துக்களை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

உயர் நீதிமன்ற நீதிபதிகளினதும், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவரினதும், நீதிபதிகளினதும் நியமனம் தொடர்பான அதன் பணியை பிரயோகிக்கையில் பேரவையானது, பிரதம நீதியரசரின் அபிப்பிராயத்தைப் பெறுதல் வேண்டும்.

41(இ) சரத்துக்கமைய ஏதேனும் ஒரு நியமனத்திற்கு தகுந்த நபரை பரிந்துரை செய்வதோ அனுமதிக்கும் நடவடிக்கைகளின்போதோ பின்பற்றப்பட வேண்டிய செயன்முறை உள்ளிட்ட கலந்துரையாடல்களில் செயற்படும் விதம் தொடர்பில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை அரசியலமைப்பு சபை தீர்மானிக்க வேண்டும்.

41எ.(1) பேரவையானது, ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கொரு தடவை, முற்போந்த மூன்று மாத காலப்பகுதியின் போதான அதன் செயற்பாடுகள் பற்றிய ஓர் அறிக்கையை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.

(2) பேரவையானது அரசியலமைப்பால் அல்லது வேறேதேனும் எழுத்திலான சட்டத்தால் அதன் மீது சுமத்தப்படக் கூடியவாறான அத்தகைய வேறு கடமைகளைப் புரிதலும் பணிகளை நிறைவேற்றதலும் வேண்டும்.

(3) பேரவையானது, அதன் கடமைகளையும் பணிகளையும் நிறைவேற்றுவதற்கும் புரிவதற்குமான விதிகளை ஆக்குவதற்கும் தத்துவமுடையதாதல் வேண்டும். அத்தகைய எல்லா விதிகளும் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, அத்தகைய வெளியீட்டின் மூன்று மாதங்களுக்குள் பாராளுமன்றத்தின் முன் கொண்டுவரப்படுதல் வேண்டும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே, இந்த விடயம் நிறைவேறி இருக்கின்றதா என்பதை நான் அறிய மாட்டேன். ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் 41ஏ(3) இற்கமைய குறித்த நடவடிக்கைகள் தொடர்பிலான சட்டங்களை தயாரிப்பதற்கு ஆணைக்குழுவிற்கு அதிகாரமுண்டு. அந்த சட்டங்களை வர்த்தமானியின் ஊடாக வெளியிட வேண்டும். வெளியிட்டதன் பின்னர் மூன்று மாதங்களுக்கு பின்னர் அதை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சட்டங்களை தயாரித்து வர்த்தமானியில் பிரசுரித்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தால், நீதிபதிகளை நியமித்திருந்தால் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது என நான் நம்புகின்றேன்.

எனது எண்ணம் என்னவென்றால் 41இ(6) மற்றும் 41ஏ(3) ஆகிய சரத்துக்களுக்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மிகவும் முக்கியமானதாகும். இந்த கோட்பாடுகளை சரிவர பின்பற்றுவதன் ஊடாக சபையின் நடவடிக்கைகளை வெளிப்படையாகவும் அரசியலமைப்பு சபையினால் எதிர்பார்க்கப்பட்ட பக்கசார்பற்ற, நேர்மையான, நியாயமான, ஜனநாயக கோட்பாடுகளுக்கமைய இயங்குவதன் ஊடாக நியாயமான சமூகத்தை கட்டியெழுப்ப அது உறுதுணையாக அமையும். அவற்றுக்கு அப்பால் சென்று இயங்குவதன் ஊடாக அரசியலமைப்பு சபை அதன் மாண்பை இழந்துள்ளது. அதற்கு அரசியல்மயமானதும் தன்னிச்சையாக செயற்பட்டதுமே காரணமாகும்.

அரசியலமைப்பு சபை இன்று வரையில் தனது நடைமுறை சட்ட திட்டங்கள் மற்றும் தனது கொள்கைகளை தயாரித்து அவற்றை வர்த்தமானி மூலம் அறிவிப்பு செய்து பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளவில்லை என்பதை நான் கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது பற்றி அரசியலமைப்பு சபை குறிப்பிடும் போது, அவர்கள் 17ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பழைய நடைமுறைகளையே தற்போதும் பின்பற்றுகிறோம் என்பதாகும். இது ஒருபோதும் திருப்திப்படக்கூடிய நிலைமை அல்ல.

17ஆவது திருத்தத்தின் கீழ் செய்யப்பட்ட நடைமுறைகளை பின்பற்ற இந்த அரசியலமைப்பு சபைக்கு முடியுமாயினும் அவ்வாறு செய்வதற்கு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு, மூன்று மாத காலப்பகுதிக்குள் அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதன் பின்னரே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என நான் கருதுகின்றேன். இது 19ஆவது திருத்தத்தின் ஒரு கட்டாயமான விடயமாகும். இன்று வரையில் அரசியலமைப்பு சபையினால் இந்த விடயங்கள் மேற்கொள்ளப்படாமல் இருப்பதன் மூலம் தெரியவருவது இந்த நிறுவனம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என்பதேயாகும்.

இது மட்டுமன்றி 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்கள் அரசியலமைப்பின் 126ஆவது அத்தியாயத்திற்கேற்ப அடிப்படை மனித உரிமைகள் மீறல் தொடர்பில் நீதிமன்றத்திற்கு வழக்கொன்றை கொண்டு செல்வதற்கான அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்தகைய நிலைமையில் 17ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சட்ட திட்டங்கள் மற்றும் நடைமுறைகளை 19ஆவது திருத்தத்தின் கீழ் எப்படி கொண்டு வர முடியும் என்பது புதிராகவே உள்ளது. இந்த நிலைமையின் கீழ் அரசியலமைப்பு சபை செயற்படும் விதம் தொடர்பில் சரியானதொரு நிகழ்ச்சித்திட்டம் அவசியமென்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

அதேபோன்று இது பற்றிய விடயங்கள் தொடர்பில் குறிப்பாக சமூகம் பார்க்கின்ற விடயங்கள் பற்றியே நான் இங்கு தெளிவுபடுத்தினேன். சட்டமா அதிபர் நியமனத்திற்கு ஒரு மாதத்திற்கு பின்னர் பொலிஸ்மா அதிபர் நியமனம் பற்றிய பிரச்சினை எழுந்தது. சட்டமா அதிபர் நியமனம் மற்றும் பொலிஸ்மா அதிபர் தெரிவு என்பவற்றில் குறிப்பாக அவர்கள் பற்றிய தீர்மானங்களை மேற்கொள்கின்ற போது அரசியலமைப்பு சபை எவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பது பற்றி அரசியலமைப்பு சபையில் உள்ளவர்கள் மாத்திரமே அறிவார்கள்.

இதற்கு காரணம் இந்த நிறுவனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமையும் அது அரசியல் மயப்படுத்தப்பட்டிருப்பதுமே ஆகும். இது போன்று எனக்கு 03 மாதங்களுக்கொரு முறை அனுப்பி வைக்கப்படும் அறிக்கையில் இது பற்றி எந்தவொரு விடயமும் குறிப்பிடப்படுவதில்லை. எனவே இந்த விடயங்கள் பற்றியும் கவனத்திற் கொள்ளுமாறு நான் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

கௌரவ அமைச்சர் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இந்த விவாதத்தின் ஆரம்பத்தில், நியமிக்கப்பட்டிருக்கும் நீதிபதிகளுக்கு நான் எதிர்ப்பை வெளியிட்டிருப்பதாக குறிப்பிட்ட கருத்தை நான் மீண்டும் மீண்டும் நிராகரிக்கிறேன். அதன் நோக்கம் உச்ச நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் உள்ள நீதிபதிகளை என்னுடன் முரண்பட வைப்பதாகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நான் இப்படி கூறவில்லை. எனது பிரச்சினை என்னவென்றால் அவ்வாறு நிராகரிக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டியவர்கள் யார்? இதற்கு ஏன் பதில் வழங்கப்படாதுள்ளது? அவர்களில் எவரும் எனது உறவினரோ அல்லது நண்பர்களோ அல்ல.

அவர்கள் என்னிடம் வந்து முறையீடு செய்கின்றனர். இதுபற்றி கூறுகின்றனர். அவர்களுக்கு இந்த விடயத்தில் பதிலொன்றை பெற்றுக்கொடுப்பதை போன்று இன்னும் பதவி உயர்வுகளை எதிர்பார்த்திருக்கின்றவர்களுக்கும் பதவி உயர்வுகளை பெற்றுக்கொடுத்து நீதியானதும் பக்கச்சார்பற்றதும் சுயாதீனதன்மை கொண்டதுமான முறைமையின் தேவையை நாம் கடுமையாக வலியுறுத்துவது அவசியம் என்பதனாலேயே நான் இந்த கருத்துக்களை குறிப்பிடுகிறேன்.

எனவே இந்த விடயங்களை முன்வைக்கின்ற போது ஒருபோதும் உங்களையோ அல்லது வேறு ஒருவரையோ குறித்து இந்த விடயங்களை நான் குறிப்பிடவில்லை. அரசாங்கம் என்ற வகையில் நாம் அனைவரும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும். நாம் தவறான வழியில் சென்றால் அனைவரும் கஷ்டத்தில் விழ வேண்டிய நிலை ஏற்படும் நீதித்துறை, சுயாதீன ஆணைக்குழுக்கள் இவை அனைத்திலும் எந்தவொரு சட்ட திட்டங்களும் வகுக்கப்படவில்லை. அவற்றின் கொள்கைகள் என்ன? அவர்களின் வழிகாட்டல்கள் என்ன? என்பது பற்றி எதுவுமே தெரியாது.

உதாரணமாக கூறுவதானால் பொலிஸ் ஆணைக்குழு பொலிசாரின் உயர் பதவிகள் முதல் சாதாரண பதவிகள் வரையிலான இடமாற்றங்கள் வரை தலையீடு செய்கின்றனர். ஆனால் ஆணைக்குழுவின் நோக்கங்கள் இவற்றிற்கு மாறுபட்டதாகும். சிறந்த பொலிஸ் சேவை ஒன்றை ஏற்படுத்துவதற்கு, சிறந்ததோர் மக்கள் சேவையை ஏற்படுத்துவதற்கு பொலிஸ் திணைக்களத்தில் புதிய ஆராய்ச்சி பிரிவைப் போன்று அறிவுத்துறையை மேம்படுத்தும் துறைகளுடன் நியமங்களை மேம்படுத்தல் அவசியமாகும்.

இன்று இந்த நாட்டில் அரச சேவையில் 16 இலட்சம் பேர் உள்ளனர். அரச சேவை ஆணைக்குழுவின் எல்லை எதுவரை என்பது குறிப்பிடப்படவில்லை. அமைச்சுக்களின் செயலாளர்கள் முதல் ஊழியர்கள் வரையில் ஆணைக்குழுவினால் தான் முகாமைத்துவம் செய்யப்படுகின்றனர். அவ்விடயத்தில் திணைக்கள தலைவர்களுக்கும் அமைச்சின் செயலாளர்களுக்கும் சில பொறுப்புகள் உள்ளன.

நாம் உருவாக்கிய 19ஆவது திருத்தத்தின் மூலம் பிறந்த அடுத்த பிள்ளைகள் தான் சுயாதீன ஆணைக்குழுக்கள். அவை பிழையான வழியில் செல்லுமேயானால் அது மிகவும் பாரதூரமானதாகும். ஏனென்றால் பரந்தளவிலான அதிகாரங்கள் அவற்றிற்கு வழங்கப்பட்டுள்ள காரணத்தினால் அவை அரசியல் மயப்படுத்தப்பட்டால் நாட்டில் பக்கச்சார்பின்மை, நடுநிலைமை, சுயாதீனதன்மை போன்ற விடயங்களில் பாரிய சவாலைகளை சமூகம் எதிர்நோக்க நேரிடும். எனவே நான் இந்த விடயங்களை தெளிவுபடுத்துவதற்காகவே இவற்றை நான் இங்கு குறிப்பிடுகின்றேன்.

 

Sat, 02/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை