168ஆவது மாதிரிக் கிராமம் திறப்பு விழாவில் அமைச்சர் சஜித்
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பையேற்றதிலிருந்து நாடு பூராவும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக, வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அங்குனுகொலபெலஸ்ஸ பிரதேச செயலகப் பிரிவில் கெந்தகெடியவில் நிாமாணிக்கப்பட்ட 168ஆவது ஸ்ரீபெனநதகம கம்உதாவ மாதிரிக் கிராமத்தினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (25) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் , தற்போதைய அரசாங்கம் எவ்வித அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்கவில்லையென எதிர்க்கட்சியினர் நாடு பூராவும் பிரசாரம் செய்து வருகின்றனர். இன்று அவ்வாறு கூறித்திரியும் இவர்கள் ஆட்சியில் இருந்தபோது வீடமைப்பு அபிவிருத்திக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் என்ன செய்தார்கள்? எமது நோக்கம் எமது நாட்டில் வாழக்கூடிய வறிய வருமானம் குறைந்த மக்களைப் பலப்படுத்தி கட்டியெழுப்பி பலமான இலங்கையை உருவாக்குவதாகும்.
இந்த நோக்கத்தினை அடைந்து கொள்வதற்காக எமது தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் எமது உதாகம திட்டத்தினை பயன்படுத்துவது எமக்கு பாரிய சக்தியாகும். தற்பொழுது நாட்டின் சகல பிரதேசங்களிலும் எவ்வித இன, மத கட்சி வேறுபாடுகளின்றி பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எமது உதாகம வீடமைப்பு திட்டங்களினுாடாக மக்களுக்கு பாரிய முதலீட்டுச் சக்தி கிடைத்துள்ளது.
தற்பொழுது நாட்டு மக்களுக்கு நாளா பக்கங்களிலிருந்தும் தகவல்கள் கிடைத்து வருவதினால், இதனுாடாக உண்மையான செய்திகளையும் தகவல்களையும் பிரித்தறியக்கூடிய சக்தி நாட்டு மக்களுக்கு இருக்க வேண்டும்.
நாடு பூராவும் தகவல் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு எமது எதிர்காலச் செயற்பாடுகளையும் திட்டங்களையும் முன்னெடுத்தல் வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
(ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்)
from tkn