மவுசாகல தோட்டத்தில் மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகள்

AMF

ஊவா மாகாணம் அப்புத்தளை தம்பேதன்ன மவுசாகல தோட்டத்தில் மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிக்க இன்று (26) பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் மற்றும் அதிகாரிகள் அடிக்கல் நட்டி வைத்தனர்.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம், வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ், 2014 இல் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 68 குடும்பங்களுக்கு தம்பேதன்ன பெருந்தோட்ட பகுதியில் குடியிருப்புகள் அமைக்கப்படவுள்ளது. தலா ஒரு வீட்டிற்கு 12 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது.

இந்நிகழ்வின் போது பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி.விஜயலட்சுமி, பசறை பிரதேச சபையின் செயலாளர், தோட்ட முகாமையாளர், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரிகள், வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் அதிகாரிகள், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸின் கவனத்திற்கு பாதிக்கப்பட்ட மக்கள் கொண்டு வந்ததையடுத்து, இராஜாங்க அமைச்சர் கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் இதற்கான நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(ஹட்டன் சுழற்சி நிருபர் - ஜி.கே. கிருஷாந்தன்)  

Tue, 02/26/2019 - 15:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை