வடமாகாண நீர் பிரச்சினைக்குத் துரித தீர்வு காண்பது அவசியம்

வடக்கிற்கான நீர்த்திட்ட மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதி

வடக்கு மக்களின் வறுமை நிலைக்கான பிரதான காரணியாகக் காணப்படும் நீர் பிரச்சினைக்கு துரித தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (12) நடைபெற்ற வட மாகாணத்துக்கான முன்மொழியப்பட்டுள்ள நீர் வழங்கல் செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு பற்றிய கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். 

இக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,   விவசாயத்தை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட இப் பிரதேச மக்களுக்கு அவர்களது விவசாயத்திற்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகள் உரியவாறு பெற்றுக்கொடுக்கப்பட்டால் வட மாகாணத்தில் நிலவும் ஏனைய அபிவிருத்தி பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என தெரிவித்தார். 

சுற்றாடல் பாதிப்புகளின்றி நடைமுறைப்படுத்தப்படும் இந்த செயற்திட்டத்தினூடாக துரித மற்றும் வெற்றிகரமான பெறுபேறுகளை வடக்கு மக்கள் பெற்றுக்கொள்வார்கள் என ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார். 

வட மாகாண நீர்ப்பாசன மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய நீர் வழங்கல் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.  

முன்மொழியப்பட்டுள்ள வடமத்திய பாரிய கால்வாய்த்திட்டம், நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் 2020ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்மொழியப்பட்டுள்ள “யாழ்ப்பாணத்துக்கு நீர்” செயற்திட்டம் ஆகியன தொடர்பாகவும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஜய்க்கா நிறுவனத்தின் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் “எல்லங்கா” குளக் கட்டமைப்பு அபிவிருத்தி செயற்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. 

மகாவலி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும மற்றும் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர். 

Wed, 02/13/2019 - 09:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை