யாழ்.விசேட நிருபர்
வட மாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்வதற்கான பணிப்புரையை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் விடுத்துள்ளார்.
இதனடிப்படையில் வட மாகாணத்தில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களினதும் உரிமையாளர்கள் தமது கல்வி நிலையங்கள் தொடர்பான முழுமையான தகவல்களையும் கல்வி நிலையம் அமைந்திருக்கும் காணி/இடம் தொடர்பான முழுமையான தகவல்களையும் எதிர்வரும் மார்ச் மாதம் 04ஆம் திகதிக்கு (2019.03.04) முன்னர் வடக்கு மாகாண கல்வி அமைச்சில் பதிவு செய்ய வேண்டும்.
இதற்கான மாதிரி விண்ணப்பப்படிவத்தினை வட மாகாணத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.np.gov.lk 05ஆம் திகதி முதல் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் இது தொடர்பான மேலதிக தகவல்களை வடக்கு மாகாண கல்வி அமைச்சின் 0212231343என்ற தொலைபேசி இலக்கம் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை வட மாகாணத்தின் நகரங்கள் மற்றும் நகரங்களுக்கு அண்மையில் பொருத்தப்பட்டுள்ள பெரிய நடுத்தர மற்றும் சிறிய பிரசார பதாதைகளில் (Banners, Holdings) அவை பிரசாரப்படுத்துவதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டபோது வழங்கப்பட்ட அனுமதி இலக்கங்களையும் இணைத்து காட்சிப்படுத்த வேண்டுமென்றும் இதுவரையிலும் அந்த அனுமதி இலக்கங்கள் இல்லாது காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகளில் அவற்றை இணைத்துக்கொள்வதற்கு பதாதைகளை காட்சிப்படுத்திய நிறுவனத்தினர் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
காட்சிப்படுத்துவதற்கான அனுமதிக்காலம் முடிவடைந்ததும் இன்னும் அகற்றப்படாத பிரசார பதாதைகளை உரிய தரப்பினர் இரண்டு வாரங்களுக்குள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அகற்றப்படாத விடத்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும் ஆளுநர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
from tkn