நாவலப்பிட்டி பத்துலுபிட்டிய பாடசாலைக்கு முன்பாக கோர விபத்து; இருவர் பலி

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலப்பிட்டி கண்டி பிரதான வீதியில் நாவலப்பிட்டி பத்துலுபிட்டிய பாடசாலைக்கு முன்பாக இன்று (19) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இருவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் காயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கம்பளையிலிருந்து கினிகத்தேனை நோக்கி, சென்ற முச்சக்கரவண்டியும் கினிகத்தேனை பகுதியிலிருந்து கம்பளை நோக்கி சென்ற கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரில் இருவர் பலியாகியதுடன், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் முச்சக்கரவண்டியின் சாரதியும், அதில் பயணித்த பயணியுமான கினிகத்தேனை பகுதியை சேர்ந்த 31வயதுடைய எஸ்.எஸ்.ஐ.கலப்பத்தி மற்றும் மீதலாவ குருந்துவத்த பகுதியை சேர்ந்த 38வயதுடைய திலக்சிரிகே அமல் குணரத்ன என தெரியவந்துள்ளது.

முச்சக்கரவண்டியை தவறான பக்கத்தில் செலுத்தியதனால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியை கைதுசெய்துள்ள நாவலப்பிட்டி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(ஹற்றன் சுழற்சி நிருபர் - ஜீ.கே. கிருஷாந்தன்) 

Tue, 02/19/2019 - 11:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை