முதல் தர கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் அஞ்சலோ பெரேரா புதிய சாதனை

இலங்கையின் முதல் தர கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் ஒரு போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களில் 2 இரட்டைச் சதங்களைக் குவித்த முதல் கிரிக்கெட் வீரராக என்சிசி கழகத்தின் தலைவர் அஞ்சலோ பெரேரா புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முதல் தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் நான்கு நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல் தர கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றின் மூன்றாவது வாரத்துக்கான போட்டிகள் (03) நிறைவுக்கு வந்தன. இதில் கொழும்பு கிரிக்கெட் கழகத்துக்கு எதிராக சிலாபம் மேரியன்ஸ் அணி இலகு வெற்றியைப் பதிவு செய்ய, எஞ்சிய 3 போட்டிகளும் வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றன.

இரு அணிகளும் துடுப்பாட்டத்தில் சோபித்த இப்போட்டி 2 இரட்டைச் சதங்கள், மற்றும் 3 சதங்களுடன் வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது. இதில் என்சிசி அணித் தலைவர் அஞ்சலோ பெரேரா முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதம் பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் மற்றுமொரு இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்தார்.

பி. சரவணமுத்து மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய என்சிசி கழகம் முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 444 ஓட்டங்களைப் பெற்றது.

என்சிசி கழகத்துக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த அஞ்சலோ பெரேரா இரட்டைச் சதம் கடந்து 201 ஓட்டங்களைப் பெற்று இம்முறை முதல் தரப் போட்டிகளில் தனது முதலாவது இரட்டைச் சதத்தை பதிவு செய்தார்.

இதனையடுத்து, தங்களுடைய முதல் இன்னிங்சுக்காகத் துடுப்பாடி எஸ்எஸ்சி கழகம் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 480 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அவ்வணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சந்துன் வீரக்கொடி ஆட்டமிழக்காது 189 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.

இந்த நிலையில், ஆட்டத்தின் இறுதி நாளன்று தமது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த என்சிசி கழகம் சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க மற்றும் சதுரங்க டி சில்வா ஆகியோர் சதமடித்து கைகொடுக்க, மறுமுறையில் சிறப்பாகத் துடுப்பாடிய அணித்தலைவர் அஞ்சலோ பெரேரா இரட்டைச் சதம் கடந்து 231 ஓட்டங்களைப் பெற்றார். இந்த இரட்டைச் சதத்தைப் பெற்றுக்கொள்ள 268 பந்துகளுக்கு முகங்கொடுத்து 3 சிக்ஸர்கள் மற்றும் 20 பவுண்டரிகளையும் அவர் விளாசியிருந்தார்.

இதன் மூலம் இலங்கையின் முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியின் இரண்டு இன்னிங்சுகளில் 2 இரட்டைச் சதங்களைக் குவித்த முதலாவது இலங்கை வீரராகவும், உலகின் இரண்டாவது வீரராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்தார்.

இதற்கு முன், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆதர் பெங் 1938 ஆம் ஆண்டு இவ்வாறு இரு இன்னிங்ஸில் 2 இரட்டைச் சதங்களைப் பெற்று சாதனை படைத்திருந்தார். குறித்த போட்டியில் அவர் 244 மற்றும் 202 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இலங்கை ஏ அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகின்ற அஞ்சலோ பெரேரா, அண்மையில் நிறைவுக்கு வந்த அயர்லாந்து ஏ அணியுடனான போட்டித் தொடரிலும் பிரகாசித்திருந்தார். எனினும், இதுவரை இலங்கை டெஸ்ட் அணிக்காக விளையாடாத அவர், 4 ஒருநாள் மற்றும் 2 ரி -20 போட்டிகளில் மாத்திரம் இலங்கைக்காக விளையாடியுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

Wed, 02/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை