கிண்ணியா பெரியாட்டுமுனை ஜாவா வீதி பகுதியிலிருந்து 7.56 கிலோகிராம் ஜெலிக்னைட் வெடிபொருள் குச்சிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்
நேற்று (09) மாலை கிழக்கு கடற்படை பிரிவினர் மற்றும் திருகோணமலை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் என, பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இவரிடமிருந்து குறித்த வெடிபொருளுக்கு பயன்படுத்தப்படும் 50.6 அடி நீளமான கம்பி/ நூலும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு வழங்கும் பொருட்டு குறித்த நபர் ஜமாலியா, நிலாவெளி, எரக்கண்டி ஆகிய பிரதேசங்களுக்கு குறித்த வெடிபொருளை வழங்கி வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் சூரிய பண்டார தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபர், திருகோணமலை மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பூரில் சட்டவிரோத மீன்பிடி; ஒருவர் கைது; மூவர் தப்பியோட்டம்
இதேவேளை, திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டி பகுதியில் ஜெலிக்னைட் வெடி பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது செய்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை (09) இவ்வாறு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு பேரில் மூன்று பேர் தப்பியோடிய நிலையில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மூதூர் - பாலநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 262 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்டதுடன், லொறி ஒன்றும், படகொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது 18 ஜெலிக்னைட் குச்சிகள் 06 டெட்டனேட்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை தப்பியோடிய மூன்று பேரையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்றையதினம் (10) மூதூர் நீதவான் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)
from tkn