அரைகுறை பிரசவத்தில் இருக்கும் பிள்ளையை கொஞ்ச வேண்டாம்

முன்னாள் எம்.பி பொன்.செல்வராசா

பாசிக்குடா நிருபர்

புதிய அரசியலமைப்பின் நிபுணர்களின் அறிக்கை தான் தற்போது வந்திருக்கின்றதே தவிர இறுதி வடிவம் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தடைகளைத் தாண்டி வருகின்ற போது தான் அது ஒரு முழுமையான சட்டவாக்கமாக இருக்குமே தவிர அரைகுறைப் பிரசவத்தில் இருக்கின்ற பிள்ளையைக் கொஞ்ச வேண்டாம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார். 

வாகரையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொங்கல் விழா நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒன்று இல்லாது விட்டிருந்தால் இன்று தேர்தல் காலமாக இருந்திருக்கும் அல்லது தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கும். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூட களைத்துப் போய் இனி ஒன்றும் செய்ய முடியாது.  

 இந்த அரசாங்கம் இந்த நாட்டை ஆழ்வதற்கு வழிவகுத்துக் கொடுத்தது எமது தமிழ்த் தலைவர்கள் தான் என்று சொன்னால் மிகையாகாது. அந்த அளவிற்கு அறிவும், ஆற்றலும் மிக்க தமிழ்த் தலைவர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை  எந்த அரசியல்வாதியும் விரட்ட முடியாது என்பதை ஒக்டோபர் சதிப் புரட்சி எடுத்தியம்பியிருக்கின்றது. 

இன்றைய சூழ்நிலையிலே எம்மை விரட்டி விடலாம் என்று சிலர் நினைக்கின்றார்கள். ஆனால் அது ஒருபோதும் முடியாது. அண்மையில் முல்லைத்தீவிலே ஒரு புத்தர் சிலை அமைக்கப்பட்டது. இன்று வவுனியாவிலும் ஒரு புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல அந்தப் பிரதேசத்தின் பெயரையே சிங்களப் பெயராக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதையிட்டு நாங்கள் மனம் வருந்துகின்றோம். 

இந்த செயற்பாட்டை இன்றைய அரசாங்கம் சற்றுச் சிந்திக்க வேண்டும். வருகின்ற ஒரு வருட காலத்தை தாங்கள் ஆள்வதற்கு வழிவகுத்தவர்கள் தமிழர்கள் என்பதை எண்ணிக்கொள்ளாமல் இவ்வாறான கவலைக்கிடமான விடயங்களை முன்னெடுத்துச் செல்வது தமிழ் மக்களுக்கு எதிரானதொரு செயற்பாடாகவே நான் நினைக்கின்றேன். 

எமக்குத் தேவையான எமது அபிலாசைகளைப் பூர்த்தி செய்கின்ற அரசியலமைப்பை  கொண்டு வர வேண்டும். இன்று அது இறுதிக் கட்டத்திலே நின்று கொண்டிருக்கின்றது.

அதில் சிலர் சட்டவாதங்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். சிலர் அதில் ஒன்றுமில்லை என்று சொல்கின்றார்கள். இத்தனை சட்டவாதிகள், நிபுணர்கள் எல்லாம் சேர்ந்து அமைத்த வரைபு வெறும் பானையாக இருந்திடுமா? 

Wed, 02/06/2019 - 11:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை