நூறு கோடி நஷ்டஈடு கோரி அமைச்சர் ரிஷாத் கடிதம்

மக்கள் மீது தனக்குள்ள செல்வாக்கு, கீர்த்தி என்பவற்றை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் நோக்கில் ஆதாரமின்றி இட்டுக்கட்டப்பட்ட செய்தியை ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்த,தொழில்சார் தகவல் தொழில்நுட்ப அமைப்பின் செயலாளர் லசந்த விக்கிரமசிங்கவுக்கு நூறு கோடி ரூபா மானநஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனது சட்டத்தரணியூடாக கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

வியட்நாமிலிருந்து மிளகை இறக்குமதி செய்து,வேறு வகையில் பொதியிட்டு அவற்றை இந்தியா உட்பட பல நாடுகளுக்கு, ஏற்றுமதி செய்து உள்ளூர் உற்பத்தியாளர்களைப் பாதிக்கும் வகையில் அமைச்சரும், அவரது சகோதரரும் நடந்து கொள்வதாக லசந்தவிக்கிரமசிங்க வெளியிட்ட அபாண்டப் பிரச்சாரத்துக்கு எதிராகவே, அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இத்தொகையை மான நஷ்டஈடாகக் கோரியுள்ளார்.

அவரது சட்டத்தரணி சந்தீப கமதிகே ஊடாக அமைச்சர் அனுப்பியுள்ள மான நஷ்டஈட்டுக் கோரிக்கை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

மக்களின் பிரதிநிதியான அமைச்சர் ரிஷாதையும், அவரது கட்சியையும் பாதிக்கும் வகையில் பொறுப்பின்றிச் செயற்பட்ட, லசந்தவிக்கிரமசிங்கவின் நடத்தையால் அமைச்சரின் மவுசும் கௌரவமும் பாழ்படுத்தப்பட்டுள்ளதாகவே அமைச்சர் கருதுகிறார்.

அரசின் முக்கியமான அமைச்சர் பற்றி எவ்வித ஆதாரங்களுமின்றி செய்தி வெளியிட்டுள்ள இவரின் பொறுப்பற்ற நடத்தை எந்த நோக்கை அடிப்படையாகக் கொண்டவை என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அமைச்சருக்கும் தனது சகோதரருக்கும் இவ்விடயங்களில் எவ்வித தொடர்புகளும் இல்லை.

எனவே14 நாட்களுக்குள் அமைச்சர் கோரிய நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைக்கு அமைச்சர் ரிஷாத்பதியுதீன் தயாராக உள்ளதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Mon, 02/11/2019 - 08:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை