சட்டவிரோதமாக தங்கியிருந்தமை தொடர்பில் விளக்கமறியல்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைதாகியுள்ள தீவிரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் நாலக்க டி சில்வாவுக்கு எதிர்வரும் மார்ச் 13 வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பான வழக்கு இன்று (27) கொழும்பு கோட்டை பதில் உத்தியோகபூர்வமற்ற நீதவான் சட்டத்தரணி ஜயந்த டயஸ் நாணயக்கார முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவருக்கு எதிர்வரும் மார் 06 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இந்தியரான மெர்சிலி தோமஸை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த விடயத்துடன் சந்தேகநபருக்கு எவ்வித தொடர்பும் இல்லை என, குற்றவியல் விசாரணை திணைக்களம் (CID) நீதிமன்றிற்கு அறிவித்ததை அடுத்து, நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.
ஆயினும் கடந்த வருடம் செப்டெம்பர் 21 ஆம் திகதி அவரது வீசா கால எல்லை நிறைவடைந்த நிலையில், வீசா இன்றி சட்டவிரோதமாக தொடர்ந்தும் இலங்கையில் தங்கியிருந்தமை தொடர்பில் அவருக்கும் எதிர்வரும் மார்ச் 13 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்றிற்கு அறிவித்த சிஐடியினர், இவ்விடயம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்வதற்காக, சட்ட மாஅதிபரின் ஆலோசனையை கோருவதாகவும் நீதிமன்றிற்கு அறிவித்தனர்.
from tkn