வெங்காயம், உழுந்து, உரு​ைளக்கிழங்கின் இறக்குமதி வரிகள் அதிகரிப்பு

உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கில் பெரிய வெங்காயம், உழுந்து மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டிருப்பதாக விவசாயம், கிராமிய பொருளாதாரம், மீன்பிடி, பண்ணை வள அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரீசன் தெரிவித்தார்.

அத்துடன்,சோளம் விவசாயிகளைப் பாதித்திருந்த படைப்புழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே இதனைத் தெரிவித்தார். பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டிருப்பதுடன், 125 ரூபாவாகக் காணப்பட்ட உழுந்தின் இறக்குமதி வரி 200 ரூபாவாக அதிகரிக்கப் பட்டுள்ளது. உருளைக் கிழங்கின் இறக்குமதி வரியானது 20 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இவ்வாறு வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

படைப்புழுவால் சோளம் விவசாயிகள் பாதிக்கப்பட்டாலும், அவர்கள் மேலும் பாதிக்கப்படாமலிருக்க சோளத்துக்கான இறக்குமதி வரி 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. படைப்புழு முழுமையாக அழிக்கப்படாவிட்டாலும் அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு முடிந்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

படைப்புழுவை அழிப்பது தொடர்பில் எமக்கு அனுபவமொன்று கிடைத்துள்ளது. பல்கலைக்கழகங்கள் நடத்திய ஆய்வுகள் மற்றும் விவசாயிகளின் முயற்சிகளால் படைப்புழுவை அழிப்பதற்கான உத்திகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இம்முறை கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் படைப்புழுவினால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே சிறுபோகத்தில் சோளம் பயிரிடுமாறு விவசாயிகளுக்கு உத்தரவாதம் வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

மகேஸ்வரன் பிரசாத்

Tue, 02/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை