ரினௌன் விளையாட்டு கழகத்திற்கு எதிரான போட்டியில் ஆட்டம் முடிவதற்கு முன் மைதானத்தை விட்டு வெளியேறிய பேருவளை சுப்பர் சன் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக இலங்கை கால்பந்து சம்மேளனம் விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.
இலங்கை கால்பந்து சம்மேளனம் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் கூறியிருப்பதாவது;
2019 ஜனவரி 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, சுகததாஸ விளையாட்டரங்கில் பெரும் மோதலாக மாறிய ரினௌன் அணிக்கு எதிரான DCL (டயலொக் சம்பியன்ஸ் லீக்) போட்டியின்போது சுப்பர் சன் அணி விளையாட்டுத் தன்மை அற்ற மற்றும் கட்டுப்பாடற்ற நடத்தையை வெளிப்படுத்தியது.
போட்டித் தொடரின் விதி மீறப்பட்டதாக முறையிட்டு சுப்பர் சன் அணி போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் மைதானத்தை விட்டு வெளியேறியது.
போட்டி அதிகாரிகள் அது பற்றி அறிவித்திருந்ததோடு, சில வீரர்களும் அதிகாரிகளும் ஒன்றுக்கு மேற்பட்ட குற்றங்களில் ஈடுபடுவது குறித்த போதுமான வீடியோ ஆதாரங்களும் உள்ளன.
சம்பவத்தில் தொடர்புபட்ட வீரர்கள் மற்றும் கழக அதிகாரிகள்
பின்வரும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஆத்திரமூட்டியது, போட்டி அதிகாரிகளை தாக்க முற்பட்டது, மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியது, அச்சுறுத்தியது மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் தொடர்புபட்டு தவறான வழிகளில் தூண்டிவிடுவது போன்ற பல குற்றங்களில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பின்வரும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அடுத்து அறிவித்தல் வரும்வரை அனைத்து கால்பந்து விளையாட்டு மற்றும் கால்பந்து நிர்வாகத்தில் இருந்தும் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுகின்றனர். இந்த ஒவ்வொரு தனி நபர்களுக்குமான தனிப்பட்ட தடைகள் FFSL மூலம் காலப்போக்கில் வெளியிடப்படவுள்ளது.
1. எம்.எஸ்.எம். ரிஸ்வான் – தலைவர் – சுப்பர் சன் வி.க. (அதிகாரி)
2. எம்.ரம்சான் – இணைச் செயலாளர் – சுப்பர் சன் வி.க. (அதிகாரி)
3. வீ. ஒகஸ்டின் – தலைமை பயிற்சியாளர் – சுப்பர் சன் வி.க. (அதிகாரி)
4. என்.ஐ.எம். ரிஷான் – கோல்காப்பு பயிற்சியாளர் – சுப்பர் சன் வி.க. (அதிகாரி)
5. டீ.டீ. ஒலுவதோசின் டானியல் – (வீரர்)
எம்.என். மொஹமட் முபஷிர் –
(கோல்காப்பாளர் / வீரர்)
7. எம்.எஸ்.எம். அஸாத் – (வீரர்)
எம்.எப்.எம். ரிப்கான் – (வீரர்)
9. டீ. மொஹமட் ஹர்பான் – (வீரர்)
10. எம்.எப்.எம். பஸான் – (வீரர்)
சுப்பர் சன் தொடர்புபட்ட சம்பவம்
போட்டியின் 70 ஆவது நிமிடத்தில் சில வீரர்கள் மற்றும் அதிகாரிகள் முடிவு ஒன்றை எதிர்த்து (ஓப் சைட் கோரி) போட்டி நடுவர்களுடன் பிரச்சினையில் ஈடுபட்டார்கள். அது பெரும் மோதலாக மாறியது.
குறித்த சம்பவத்தின்போது, பகுதி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ள சுப்பர் சன் விளையாட்டுக் கழகத்தின் வீரர்களும் அதிகாரிகளும், போட்டியில் தொடர்ந்து விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்து மைதானத்தை விட்டு வெளியேறினர்.
சுப்பர் சன் விளையாட்டுக் கழகத்தின் இந்த செயற்பாடானது, விளையாட்டின் மகத்துவத்தன்மையை மீறியது மாத்திரமின்றி டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் போட்டி விதிமுறைகளில் சரத்து 8.1.3 மற்றும் 8.1.4 ஆகியவற்றை மீறுவதாகவும் அமைந்திருந்தது.
எனவே, போட்டியின் விதிமுறைகளுக்கு அமைய, போட்டிக் குழு (competition committee) குறித்த கழகம் மீது கீழே குறிப்பிடப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்தது.
சுப்பர் சன் விளையாட்டுக் கழகம்,
தற்பொழுது நடைபெற்றுவரும் 2018ஆம் ஆண்டுக்கான டயலொக் சம்பியன்ஸ் லீக் (DCL) கால்பந்து தொடரில் இனிவரும் போட்டிகளில் பங்கேற்பதற்கான தகுதியை இழக்கும் அதேவேளை, அடுத்துவரும் 2 DCL தொடர்களில் விளையாடுவதற்கான தகுதியினையும் இழந்துள்ளது.
அவ்வணி பங்குகொண்ட அனைத்துப் போட்டிகளும் ரத்துச் செய்யப்பட்டு செல்லுபடியாகாத போட்டியாக அவை கருதப்படும். இறுதி தரவரிசையை நிர்ணயிக்கும்போது சந்தேகங்களை தவிர்ப்பதற்காக, அந்தப் போட்டிகளின் கோல்கள் மற்றும் புள்ளிகள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது. (சரத்து 8.2 (a) எப்.ஏ. கிண்ணம் மற்றும் டிவிசன்-2 தவிர எந்த ஒரு தொடரிலும் பங்கேற்பதற்கான தகுதியை அவ்வணி இழந்துள்ளதுடன், சுப்பர் சன் விளையாட்டுக் கழகம் டிவிசன்-2 இல் இருந்து போட்டிகளை தொடர வேண்டும் (சரத்து 8.2.d)
FFSL இன் மானியத் தொகையான 200,000/- ரூபாவை 30 நாட்களுக்குள் திருப்பித்தர உத்தரவிடப்படுவதோடு, ஏனைய மானியங்கள் அனைத்தையும் கழகம் இழக்கின்றது. கால்பந்து விளையாட்டுக்கு பெரும் அவமதிப்பைச் செய்த சுப்பர் சன் விளையாட்டுக் கழகத்தின் கட்டுப்பாடு இல்லாத மற்றும் விளையாட்டுத் தன்மையற்ற நடத்தைக்கு FFSL மேலும் கண்டனத்தை தெரிவிக்கிறது.
இந்த முடிவுடன் அமுலுக்கு வருவதோடு மேல் உள்ள தடைகளுக்கு கட்டுப்பட இத்தால் அறிவுறுத்தப்படுகிறது.
from tkn