நபரொருவர் குத்திக் கொலை; 9 பேருக்கு மரண தண்டனை

நபர் ஒருவரை வெட்டியும் குத்தியும் கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி உள்ளிட்ட ஒன்பது பேருக்கு மரண தண்டனை விதித்து சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி செல்வி இவோன் பெர்னாண்டோ தீர்ப்பளித்துள்ளார்.  

மாராவில முதுகட்டுவ லங்சிகம போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த சகோதரர்களான இருவர் உள்ளிட்ட ஒன்பது பேருக்கே இவ்வாறு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2001ம் ஆண்டு ஜூன் மாதத்தின் ஒரு தினத்தில் சிலாபம் மேல் நீதிமன்ற பிரிவுக்குட்பட்ட மாராவில லங்சிகம பிரதேசத்தில் வர்ணகுலசூரிய மஹலேகம்லாகே லயனல் பெர்னாண்டோ என்ற அப்போது (27வயது) நபரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வாளினாலும், கத்தியினாலும் தாக்கி கொலை செய்தமை, முறையற்ற சட்டவிரோதமாக ஒன்று சேர்ந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்தன. 

வழக்கு விசாரணைகளின் போது தாம் நிரபராதிகள் எனத் தெரிவித்ததால் அவர்களுக்கு எதிரான சாட்சிகளின் விசாரணை ஆரம்பமானது. இதனடிப்படையில் பல நாட்களாக இடம்பெற்று வந்த வழக்கு விசாரணைகளின் பின்னர் தெரிவிக்கப்பட்ட சாட்சிகளின் பிரகாரம் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் குற்றம் செய்துள்ளமை உறுதியானதால் அவர்களுக்கு இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

இவ்வழக்கு விசாரணையின் ஆரம்பத்தில் எதிராளிகளாக பத்து பேர் ஆஜராகியிருந்த போதும் அவர்களுள் ஒருவர் வழக்கு விசாரணைகளின் இடைநடுவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.   

புத்தளம் விஷேட நிருபர் 

Wed, 02/13/2019 - 09:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை