8 பல்கலை மாணவர்களும் விடுதலை; தலா ரூ. 52 ஆயிரம் அபராதம்

ஹொரவபொத்தானை- கிரலாகல புராதன தூபி மீது ஏரி எடுத்த புகைப்படம் தொடர்பில் கைது செய்யப்பட்ட எட்டு பல்கலைக்கழக மாணவர்களையும் இன்று (05) கெபித்திகொல்லாவ நீதிமன்றம் விடுவித்துள்ளது.

கெபித்திகொல்லாவ நீதவான் எச். கே. மாலிந்த ஹர்சன த அல்விஸ்  முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவர்கள் மீதுமூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. 

முதலாம் இரண்டாம் குற்றச்சாட்டுகளுக்கு அரச செலவாக ஆயிரம் ரூபாய் செலுத்துமாறும் மூன்றாவது குற்றச்சாட்டிற்கு 50ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் நீதவான் இன்று கட்டளையிட்டுள்ளார்.

எட்டு பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் மூன்று சட்டத்தரணிகள் சிராஸ் நூர்தீன்,  சப்ராஸ் ஹம்சா, ருஷ்தி ஹபீப்குழுவினர் கெபித்திகொல்லாவ நீதிமன்றில் 45 நிமிடங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் வாதாடினர். இதனையடுத்து அவர்கள் மீது 3குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருப்பதாகவும் அதில் முதலாவது குற்றச்சாட்டில் மரங்களுக்கு இடையில் குளறுபடிகளை ஏற்படுத்தியமை, சட்டவிரோதமான முறையில் ஒன்றுசேர்ந்தமை மற்றும் தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான இடத்தில் அனுமதி இல்லாமல் நுழைந்தமை போன்ற குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்தது.

மாணவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், அவர்கள் இதனை அறியாமல் செய்ததாகவும், இவர்களின் எதிர்காலம் குறித்து மன்னித்து விடுதலை வழங்குமாறும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)

 

Tue, 02/05/2019 - 12:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை