அக்குறணை பிரதேச சபையினால் நிர்வகிக்கப்பட்டுவரும் அலவத்துகொடை இயால்காமம் பிரதேசத்தில் அமைந்துள்ள கூட்டுப்பசளை தயாரிக்கும் நிலையத்தை நவீனமயப்படுத்துவதற்கு 60இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எம்.இஸ்திஹார் தெரிவித்தார்,
நேற்று (05) நடைபெற்ற அக்குறணை பிரதேச சபையின் மாதாந்த பொதுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அக்குறணை பிரதேச சபையினால் நிர்வகிக்ககப்படும் கூட்டுப்பசளை தயாரிக்கும் நிலையத்தினால் தாம் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகுவதாகக் கூறி அப் பிரதேச மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதேவேளை இந்நிலையத்தை மறுசீரமைத்து பாதிப்புக்கள் இல்லாத, துர்நாற்றம் வீசாத, ஒரு ரம்மியமான சூழலாக அவ்விடத்தை மாற்றுவதற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யவுள்ளதாக பிரதேச சபையின் தலைவர் ஐ.எம். இஸ்திஹார் தெரிவித்தார்.
அதன் ஒரு கட்டமாக, இந் நிலையத்தை நவீனமயப்படுத்துவதற்கு 60இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் கூட்டுப்பசளை தயாரிக்கும் நிலையத்தை சுற்றியுள்ள மதிலை மேலும் உயர்த்துவதற்கும், புதிதாக மதில் தேவைப்படும் பிரதேசங்களுக்கு மதில் கட்டுவதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேநேரம், இவ்விடத்தில் பிரதேச சபையின் வாகன தரிப்பிடத்தையும் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
(அக்குறணை குறூப் நிருபர் - ஜே.எம். ஹபீஸ்)
from tkn