புதியவை பொருத்தப்பட வேண்டும் பரிசீலனை அறிக்கையில் பரிந்துரை
பாராளுமன்றத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் உயர்த்திகள் 36 வருடங்கள் பழைமை வாய்ந்தவை என்பதால், புதிய மின் உயர்த்திகள் பொருத்தப்பட வேண்டுமென பாராளுமன்றத்துக்குப் பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
கடந்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்திய மின் உயர்த்தி இடைநடுவில் செயலிழந்தது. இச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனம் அழைக்கப்பட்டு பரிசீலனை நடத்தப்பட்டது. இதன் பரிசீலனை அறிக்கை பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது.
இது பற்றி பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி நேற்று சபையில் அறிவித்தார்.
சபாநாயகர் அறிவிப்பு நேரத்தில் மின் உயர்த்தி நிறுவனம் வழங்கிய விசாரணை அறிக்கை பற்றிய தகவல்களை பிரதி சபாநாயகர் சபைக்கு முன்வைத்தார்.
அதில் மேலும் அவர் சுட்டிக்காட்டியதாவது: பாராளுமன்றத்தில் மின் உயர்த்தி செயலிழந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு அவர்கள் மின் உயர்த்திகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இதன் பிரகாரம் சம்பந்தப்பட்ட மின் உயர்த்தி 36 வருடங்கள் பழைமையானதென்றும், சம்பவம் நடைபெற்ற சமயம் மின் உயர்த்தியிலிருந்த மைக்ரோ ஸ்விட்ச் செயற்படாததால் அதிகூடிய பாரம் தொடர்பில் ஒலி எச்சரிக்கை வெளியிடப்படவில்லையென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒலி எச்சரிக்கை எழுப்பப்படாததால் அதிக எண்ணிக்கையானோர் மின் உயர்த்தியை பயன்படுத்தியுள்ளனர். சிறிது தூரம் பயணித்த மின் உயர்த்தி இடைநடுவில் இறுகியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் உயர்த்திகள் 36 வருடம் பழைமை வாய்ந்தவை என்பதால் தடையின்றி இதனைப் பயன்படுத்துவதற்கு புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய மின் உயர்த்திகள் பொருத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்தவித இட யூறுமின்றி மின் உயர்த்திகளைப் பயன்படுத்துவதாயின் புதியவற்றைப் பொருத்துமாறும் இந்நிறுவனம் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்துக்குப் பரிந்துரை செய்துள்ளது என்றார்.
ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்
from tkn