சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 21 பேர் சியம்பலாண்டுவவில் கைது

Rizwan Segu Mohideen
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 21 பேர் சியம்பலாண்டுவவில் கைது-Human Trafficking Including 21 Illegal Migrant 24 Arrested

இடைத்தரகர் ஒருவர் மற்றும் இரு பிரதான சந்தேகநபர்களும் கைது

சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முற்பட்ட 21 பேர் மற்றும் குறித்த நடவடிக்கையை மேற்கொண்ட மூவர் உள்ளிட்ட 24 பேர் சியம்பலாண்டுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (14) பகல் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 21 பேர் மற்றும் குறித்த நடவடிக்கையின் இடைத்தரகராக செயற்பட்ட ஒருவர் உள்ளிட்ட 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த 22 பேரும், சியம்பலாண்டுவ, முத்துகண்டிய 2 ஆம் கிராமம் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருந்த இடத்தில் இரண்டு வாகனங்கள் மற்றும் ரூபா 6 இலட்சத்து 27 ஆயிரம் பணம் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த நபர்களுக்கு இடைத்தரகராக செயல்பட்ட நபர், எகொடவத்தை, சிலாபம் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் ராஜு என அழைக்கப்படும் ஜூட் குமார பெனாண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த சட்டவிரோத நடவடிக்கையை முன்னின்று மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் இரு பிரதான சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் இருவரும், திஸ்ஸமகாராமை, பண்ணேகம பிரதேசத்திலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சளார் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குளியாபிட்டி தண்டகம பிரதேசத்தைச் சேர்ந்த, சம்பவமூர்த்தி கல்யாணசுந்தரம் மற்றும் 49 வயதான கண்டி, தெல்தோட்டையைச் சேர்ந்த வெதசிறி பிரியந்த  ஜயலத் சபி த சில்வா ஆகிய இருவருமே குறித்த சட்டவிரோத நடவடிக்கையின் பிரதான சந்தேகநபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்தே நடவடிக்கையானது குடிவரவு - குடியகல்வு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என தெரிவித்த பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர, இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Thu, 02/14/2019 - 18:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை