பாகிஸ்தானில் சவூதி அரேபியா 20 பில்லியன் டொலர் முதலீடு

பாகிஸ்தானின் பலவீனமான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அந்நாட்டில் 20 பில்லியன் டொலர் முதலீடு செய்ய சவூதி அரேபியா உறுதி அளித்துள்ளது.  

சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மான் பாகிஸ்தானில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

தனது நாட்டில் நிலவும் நிலையற்ற பொருளாதாரத்தை சரிக்கட்டுவதற்கு சர்வதேச உதவியை பாகிஸ்தான் எதிர்நோக்கியிருந்த நிலையில், இந்த முதலீடுகளின் மூலம் சவூதி கைக்கொடுத்துள்ளது. 

சவூதி அரேபியாவின் 20 பில்லியன் முதலீட்டில் அதிகபட்சமாக, பாகிஸ்தானின் பலுௗசிஸ்தான் மாகாணத்திலுள்ள குவாடர் துறைமுகத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு மட்டும் 8 பில்லியன் செலவிடப்படும். 

அதுமட்டுமின்றி, இரண்டு தரப்பினருக்கும் இடையே எரிசக்தி, எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகளும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ளன. 

“இந்த முதலீடுகள் முதலாவது கட்டம்தான். இது கண்டிப்பாக ஒவ்வொரு மாதமும், ஆண்டும் வளர்ந்து இரு நாடுகளுக்கும் பலனளிக்கும் என்று நம்புகிறேன்” என்று சவூதி இளவரசர் முஹமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானில் நிலவி வரும் பணப்பற்றாக்குறையை தீர்க்கும் பொருட்டு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தனது நட்பு நாடுகளிடம் உதவிகளை எதிர்நோக்கி உள்ளார். பாகிஸ்தானில் கடந்த 1980களில் இருந்து 13ஆவது முறையாக ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்கு, சவூதி அரேபியா ஏற்கனவே ஆறு பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சவூதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, சர்வதேச நெருக்கடிகளை சந்தித்து வரும் முஹமது பின் சல்மான் தற்போது ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

பாகிஸ்தானிலிருந்து இன்று இந்தியா வரும் சல்மான், புதன் மற்றும் வியாழக்கிழமை சீனாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். பாகிஸ்தான், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடனான உறவை மேம்படுத்துவது மட்டுமன்றி, கசோக்கி விவகாரத்தால் சர்வதேச அளவில் பெற்ற அவப்பெயரை மாற்றுவதற்கு இந்த சுற்றுப்பயணத்தை சல்மான் பயன்படுத்துவார் என்று கருதப்படுகிறது. 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் பதற்றம் அதிகரித்திருக்கும் சூழலிலேயே சவூதி முடிக்குரிய இளவரசரின் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.      

Tue, 02/19/2019 - 12:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை