யாழ். தெல்லிப்பளையில் வீட்டில் இருந்த பெண்ணை தாக்கி 17 பவுண் நகைகளை கொள்ளையடிப்பு

யாழ். தெல்லிப்பளை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த குடும்ப பெண்ணை தாக்கி 17 பவுண் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

தெல்லிப்பளை கட்டுவன் புலம் வீதியில் உள்ள வீடொன்றிலையே நேற்று சனிக்கிழமை (9) அதிகாலை இக் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டின் ஜன்னல் கம்பிகளை வளைத்து அதனூடாக அதிகாலை வேளை உட்புகுந்த மூன்று கொள்ளையர்கள், வீட்டில் நித்திரையில் இருந்தவர்களை எழுப்பி கத்தியைக் காண்பித்து மிரட்டி வீட்டினை சல்லடை போட்டு தேடியுள்ளனர்.

அதன் போது வீட்டில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தினை எடுத்துக்கொண்டனர். பின்னர் குடும்ப பெண்ணின் தாலியினை பறிக்க முற்பட்ட போது அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்க அவரின் தலையில் பலமாக கொள்ளையர்கள் தாக்கி தாலி உட்பட 17 பவுண் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

கொள்ளையர்களின் தாக்குதலில் காயமடைந்த தனது மனைவியை, கணவன் மீட்டு தெல்லிப்பளை ஆதர வைத்திய சாலையில் அனுமதித்துள்ளார். அதேவேளை தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்தார். அதனை அடுத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(புங்குடுதீவு குறூப் நிருபர்-பாறுக் ஷிஹான்)

Sun, 02/10/2019 - 13:27


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை