11 பேருக்காக நான் துடுப்பாட்டம் செய்ய இயலாது படுதோல்வியால் ஜோ ரூட் காட்டம்

மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான படுதோல்வியால் ஏமாற்றமடைந்த ஜோ ரூட், 11 பேருக்காக நான் துடுப்பாட்டம் செய்ய இயலாது என்று துடுப்பாட்டவீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேற்கிந்திய தீவு -– இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து 381 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. அண்டிகுவா நார்த் சவுண்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை 0- – 2 என மோசமாக இழந்துள்ளது.

தோல்வி குறித்து இங்கிலாந்து அணி தலைவர் ஜோ ரூட் கூறுகையில் ‘‘டெஸ்ட் கிரிக்கெட்டில் இரு இன்னிங்சிலும் 200 ஓட்டங்களுக்குக் குறைவாக அடித்தால் அதிகமான போட்டிகளில் வெற்றிபெற இயலாது. ஆகவே, இந்த துயரத்தில் இருந்து வெளியே வரவேண்டும். இதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வலிமையாக திரும்ப வேண்டும்.

நாங்கள் போதுமான ஓட்டங்கள் குவிக்கவில்லை. அனுபவமான வீரர்கள் 50 ஓட்டங்களுக்கு மேல் அடிக்காத நிலையில், மற்ற வீரர்கள் ஓட்டங்கள் குவிப்பது மிகவும் கடினம்.

இரண்டு டெஸ்டிலும் செய்ததைவிட சிறப்பாக செயல்பட முயற்சி செய்ய வேண்டும். அல்லது சில விஷயங்களில் சிறு மாற்றங்கள் செய்ய வேண்டும். இந்த வாய்ப்புகள் தனி வீரர்களிடம் இருந்து வரவேண்டும். நான் 11 வீரர்களுக்காக பேட்டிங் செய்ய இயலாது. அதேபோல் தலைமை பயிற்சியாளரான பெய்லிஸ் அல்லது துடுப்பாட்ட பயிற்சியாளர் மார்க் ராம்பிரகாஷ் வந்து துடுப்பாட்டம் செய்ய இயலாது.

பொறுப்பு தனி மனிதர்களிடம் இருந்து வர வேண்டும். ஆனால், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குழுவாக ஒன்று சேர்ந்து அடுத்த டெஸ்டில் வலிமையாக திரும்பி பதிலடி கொடுக்க வேண்டும்’’ என்றார்.

Wed, 02/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை